ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து சி.ஜி. மற்றும் கிராபிக்ஸ் வேலைகள் மிக தீவிரமாக நடந்து வருகிறது. இது 3டி கேமிராவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ள முதல் 3டி தொழில்நுட்ப படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பட வெளியீடு தொடர்பாக, திரையரங்கு உரிமையாளர்களுக்கு முழுமையான 3டி தொழில்நுட்ப விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னையில் இன்று காலை நடந்தது.இதில் லைகா நிறுவனத்தின் ராஜூ மகாலிங்கம்,மற்றும் அபிராமி ராமநாதன், திருப்பூர் சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ராஜூ மகாலிங்கம் பேசியதாவது:
“ரூபாய்400 கோடி முதலீட்டில் உருவாகியுள்ள ‘2.0’ திரைப்படம், முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால்,இந்தியாவில் 1500 திரையரங்குகள் மட்டுமே உள்ளன. இதில், நிறைய திரையரங்குகள் 3டி-யில் மாற்றப்பட வேண்டும் என விரும்புகிறோம்.ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரி தொடர்பான விஷயங்கள் முழுமையாக முடிவுக்கு வரும் வரை புதிய படங்கள் எதையும் செய்ய வேண்டாம் என்று தலைமை அலுவலகத்திலிருந்து கூறியுள்ளார்கள்.
ஆகையால் இந்த தொழிலில் இருக்கும் தொழிலாளர்கள் பலருக்கும் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும். லைகா நிறுவனம் சார்பாக தமிழக அரசை, கேளிக்கை வரியை முழுமையாக நீக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்”. இவ்வாறு அவர் பேசினார்.