நடிகர் எஸ்.வி. சேகர், கமல் ஹாசனை இன்று காலை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
நடிகர் கமல்ஹாசனுக்கு இளைஞர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. எல்லாவற்றையும் விமர்சிக்கும் கம்யூனிஸ்டுகளைப் போல் இல்லாமல் சரியாக விமர்சிக்கும் கமல் போன்றவர்களின் விமர்சனம் சரியானது. மேலும் இப்போது வரை பாஜகவை விமர்சிக்கவில்லை. அதோடு தூய்மை இந்தியா, பண மதிப்பு நீக்கம் போன்றவற்றை கமல் ஆதரித்தவர்.

அவர் அரசியலுக்கு வந்து புதுக்கட்சி தொடங்கினால், படித்தவர்கள் ஏராளமானவர்கள் அவரது கட்சியில் இணைவார்கள். முன்பு மூப்பனார் த.ம.கா தொடங்கிய பொது என்ன வரவேற்பு அவருக்கு கிடைத்ததோ, அதே வரவேற்பும் ,ஆதரவும் கமல்ஹாசனுக்கு கிடைத்துள்ளது கமல்ஹாசன் இன்றைய இளைஞர்களின் நம்பிக்கை நாயகனாக உருவாகியுள்ளார். கமல்ஹாசனுக்கும் எனக்கும் நாற்பது வருட நட்பு. இதன் காரண்மாகவே அவரை நேரில் சந்தித்து வாழ்த்தினேன். தமிழகத்தின் நலன், தமிழர்களின் முன்னேற்றம் , எதிர்கால சிந்தனையுடன் செயலாற்றி வரும் கமல் அரசியலுக்கு வந்து தமிழக மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்பதே என் போன்றவர்களின் ஆசை. கமலின் சிந்தனையும், மோடியின் சிந்தனையும் ஒன்றாகவே உள்ளது. நீட் இன்னும் பலருக்கு புரியாத விஷயமாக இருக்கிறது. கல்வி கொடுக்க வேண்டிய அரசு மது விற்கிறது. மது விற்க வேண்டியவர்கள் கல்விக்கூடம் நடத்துகிறார்கள். இது எல்லாவற்றுக்கும் காரணம் அரசின் ஸ்திரமற்ற தன்மைதான்.இவ்வாறு அவர் கூறினார்.