இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடிக்கும் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ திரைப்படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.இப்படம் குறித்து இயக்குனர் ஜனநாதன் கூறியதாவது
“குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் படத்தின் ‘புறம்போக்கு’என்ற தலைப்பே மிகவும் வித்தியாசமான அர்த்ததைக் கொண்டது.
‘புறம்போக்கு’ என்ற சொல் தமிழில்,வழக்கத்தில் கொச்சையாக பயன் படுத்தப்பட்டாலும், இது ஆழமான அர்த்தம் கொண்ட, வரலாற்று ரீதியாக தமிழர்களின் வாழ்வியலோடு சேர்ந்த சொல்.புறம்போக்கு நிலம் யாருக்கும் சொந்தமானது அல்ல, மக்களுக்கு பொதுவானது. மக்கள் தாங்கள் வசிக்கும் ஊரில் குடியிருப்பு பகுதியைத் தவிர்த்து பொது தேவைக்கு நிலங்களை; ஏரி புறம்போக்கு, சுடுகாடு புறம்போக்கு, ஆற்றுப் புறம்போக்கு, மந்தைவெளி புறம்போக்கு, என்று பொது நிலங்களை பதினைந்து வகைகளுக்கும் மேல் பிரித்து வாழ்ந்தனர். மேலும், மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப குடியிருப்புகளை கட்டிக் கொள்வதற்கு நத்தம் புறம்போக்கு நிலங்களையும் விட்டு வைத்தனர்.இதற்கு மேல் ஊர் பொதுவான சாலைகளுக்கும், பஸ் நிறுத்தம், மேலும் பள்ளிகூடம், மருத்துவனை கட்ட அரசு‘புறம்போக்கு’ நிலங்களும் இதில் அடக்கம். மலைகளும், பனி சிகரங்களும் துருவங்களும் சர்வதேச கடல் பரப்பும் புறம்போக்கே.. காற்றும், ஒளியும் நிலவொளியும் சிகரங்களும் எல்லையற்ற அண்டவெளியும் புறம்போக்கே… எதுவும் தனியுடமை அல்ல, பொதுவுடமை தான்.குழம்பிப் போன இந்த காலகட்டத்தில் பொதுவுடமை கருத்தை மறுபடியும் மறுபடியும் வலியுருத்தவே ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ என்று தலைப்பு வைக்கப்பட்டது.” என்றுக் கூறினார்.‘ ஏப்ரல் மாதத்தில் இசையையும் , தொடர்ந்து மே 1 ஆம் தேதி படத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளோம். ஏற்கனவே, ‘பொறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ என்ற தலைப்பு மக்களுக்கு பிடித்திருப்பதும், சமுக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருவதும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.” என்கிறார்.