சூர்யா நடித்து செல்வராகவன் இயக்கும் படத்திற்காக இன்று பொள்ளாச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தேன்.
அங்கே காத்திருக்கும் போது
“நீங்கள் பொன்வண்ணன் தானே ?”
என சிறுவயதில் ஒரு சகோதரர் அறிமுகமானார்.
அவர் என்னிடம் சினிமாவை பற்றி எதாவது கேட்பார் என எதிர்பார்தேன்.
ஆனால் அவர் கேட்ட முதல் கேள்வி சினிமாவை பற்றியல்ல …
“காவிரி பிரச்சனை என்னாச்சு சார் ?”என்பதுதான்.
நான் ஆச்சரியத்துடன் …
“நீங்க வெளிநாட்டிலிருந்து வருகிறீர்களா?என்றேன்.
இல்லை சார் …பூனே
அங்கே என்ன பன்றீங்க…?
ராணுவ பயிற்சியில் இருக்கேன் ..,,
-சுவராஸ்யமானேன்….
எந்த ஊர் நீங்க..?
பூர்வீகம் ராம்நாடு…!ரொம்பவருஷமா கோவையில் சிறு ஹோட்டல் (காந்திபுரம் சிவானந்தா காலனியில் முத்து ஹோட்டல் ) நடத்தி வருகிறோம்.
ஒருமாத விடுப்பில் ஊருக்கு போகிறேன் “என்றார்.
எப்படி ராணுவ ஆசை வந்தது..?
“அப்பா ஆசைப்பட்டார்..அவருக்கு சிறுவயதில் காலில் அடிபட்டதால் ராணுவத்தில் சேரமுடியல..! அதனால
என்னை உடுமலை பேட்டை அமராவதி “சைனிக் ஸ்கூல்ல” சேர்ந்தார் .அவரது ஆசைய நிறைவேற்ற என்னை கஷ்டப்பட்டு படிக்கவச்சார்.
“கனவுகள்தான் லட்சியங்களாகிறது “
என நினைத்துக்கொண்டே ..தொடர்ந்து
ராணுவ பயிற்சி அனுபவங்களை கேட்டேன்.
“4 வருடம் காலம்….பயிற்சிக்கு பலமாநிலத்திலிருந்து வந்தவர்கள்தான் அதிகம்.
1800 பேரில் தமிழக இளைஞர்கள் 30 பேர்தான்.
மற்ற மாநிலத்தவர் எல்லோரும் அவர்கள் தாய்மொழியை பேசினாலும் இந்தியையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள் ஆனால் நான் ஆரம்பத்தில் இந்தி தெரியாமல் கஷ்டப்பட்டேன் ..
காலை 5மணியிலிருந்து இரவு 10 மணிவரை பலவிதமான வகுப்புகள்…..”……..,
என அனைத்து ராணுவ பயிற்சிகளையும் கூற நான் சுவராஸ்யமாக கேட்டு தெரிந்து கொண்டேன்…..!
..”தமிழகத்தில் ராணுவத்திலிருப்பவர்களுக்கு பெண் கொடுக்க யோசிக்கறாங்க…..வடமாநிலத்தில் போட்டி போட்டு குடுக்கிறார்கள் சார்..!என்றார்
அவருடன் பேசிவந்த நேரத்தில் என்னுடன் புகைப்படம் எடுக்கவேயில்லை …ஆச்சரியப்பட்டு கேட்டேன்….
…”பயிற்சிபள்ளியில் செல் போனுக்கு அனுமதியில்லை சார்..! ஆரம்பத்தில் கஷ்டமா இருந்துச்சு..
ஆனா இப்ப நிம்மதியா இருக்கு…மனிதர்களுடன் முகம் பார்த்து பேச நிறைய நேரம் கிடைக்கிறது “ என சிரித்தார்…….உண்மைதான்…
தொடர்ந்த விமான பயணத்தில் -தமிழ்நாட்டு அரசியல் நிகழ்வுகள் ..காவிரி பிரச்சனை…அனைத்தையும் அவருக்கு விவரித்தேன்.
என் போனில் அவருடன் புகைப்படம் எடுத்து, கனவுகளை நனவாக்கிய அவரின் “தந்தைக்கு” அனுப்பிவிட்டு ,
நிறைவான விமானபயணத்தை நிறைவுசெய்துவிட்டு….
இதோ,பொள்ளாச்சியை நோக்கி……