மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்தார் வென்றார்,
நடிகர் திலகம் சிவாஜியும் வந்தார் ,ஆனால் தோற்றார்.
இருவருமே மக்களின் செல்வாக்கு உள்ள மாமனிதர்கள்.
இருந்தும் சிவாஜியினால் எம்.எல்.ஏ.ஆக முடியவில்லை.ஏன்?
ஆண்டுகள் பல கடந்தும் சரியான விடை கிடைக்கவில்லை.
காரணம் சொல்கிறார் நடிகர் ராஜேஷ்.
“எம்.ஜி.ஆர், சிவாஜி இருவருடனும் நான் நெருக்கமாக இருந்தவன், சிவாஜியிடம் இருபது ஆண்டுகள், எம்.ஜி.ஆரிடம் நான்கு ஆண்டுகள் .1987-ல் எம்.ஜி.ஆர். சிகிச்சைக்காக பால்டிமோரில் இருந்தபோது சிவாஜி அவரை பார்ப்பதற்கு சென்றார். அப்போது “எனக்குப் பிறகு ஜானகி ரொம்பவும் கஷ்டப்படுவா. கஷ்டப்படாம பார்த்துக்க. உதவியாக இரு சப்போர்ட் பண்ணு ” என்று சிவாஜியிடம் வாக்குறுதி வாங்கிக்கொண்டார்.இது எனக்கு நன்கு தெரியும்.
எம்.ஜி.ஆரும் சிவாஜியும் அண்ணன்தம்பியாக வாழ்ந்தவர்கள். எம்.ஜி.ஆர்.,சக்கரபாணி இருவரும் சாப்பிட சென்றால் “பொறுங்கள் கணேசனும் வந்து விடட்டும் ” என அம்மா சொல்லிவிடுவார். அப்படி பாசமும் நேசமும் கலந்து வளர்ந்தவர்கள்.1943-ல் இருவரும் சேர்ந்துதான் ஹோட்டலுக்கு சாப்பிடச் செல்வார்கள்.அத்தகைய பண்புடையவர்கள் பால்டிமோரில் பரிமாறிக்கொண்ட வாக்குறுதிதான் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் ஜானகி அணியின் பின்னால் சிவாஜியை நிற்க வைத்தது.
அவர் வாக்குறுதியை மறந்து கலைஞர் பக்கம் சென்றிருந்தால் எத்தனையோ பதவிகள் சிவாஜிக்கு வந்திருக்கும்.
கர்ணன் படத்தில் வருகிற பாட்டு சிவாஜிக்காக எழுதப்பட்டதோ என்னவோ!
“செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் தேடி வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா!”பாடலை நினைத்துக் கொள்ளுங்கள். சிவாஜி இறந்த மறுநாள் இந்த பாடலைத்தான் ஒலிபரப்ப வைத்தேன்” என்கிறார் ராஜேஷ்.