சொத்து குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதாவை இன்று கர்நாடகா நீதிமன்றம் அதிரடியாக விடுவித்தது. இதையடுத்து தமிழகம் முழுவதிலும் அதிமுகவினர் மற்றும் திரையுலகினர் இனிப்புகள் வழங்கியும்,பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர். ஜெ.விடுதலை குறித்து இன்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் அமைப்பின் சார்பில் அதன் தலைவர் சிவா, பொதுச்செயலாளர் செல்வராஜ், பொருளாளர் சந்திரன் மற்றும் அனைத்து நிர்வாகிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு! ‘: பல தடைகளைக் கடந்து தன்மேல் போட்ட பொய்யான வழக்குகளை தகர்த்தெறிந்து நீதிமன்றத்தில் தான் நிரபராதி என்பதை உறுதிப்படுத்தி நியாய தேவதையாக, தர்மத்தின் தலைவியாக விடுதலை பெற்றிருக்கும் ஏழரை கோடி தமிழர்களின் இதயத்தில் வாழும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் விடுதலை நாள் தமிழருக்கு ஒரு பொன்னாள். இந்நாளிலே விடுதலை பெற்ற அம்மா அவர்களுக்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்’. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.