“மைக்கை கழற்றி வைத்தது கடுமையான விதி மீறல் “என்று மும்தாஜை கமல் கண்டித்தாலும் அவரை வீட்டை விட்டு வெளியேற்ற மாட்டார்கள் என்பது எனது அனுமானம். சகுனி இல்லையேல் பாரதம் ஏது? சூப்பர் சிங்கர் பைனல் வந்து விட்டதால் அனந்து சாருக்கு அங்கு வேலை இல்லை. அதனால் இங்கேயே இருந்து விட்டு போகட்டுமே என்று விஜய் டி.வி.ஆளை வைத்துக் கொண்டார்கள். மமதி போக வேண்டிய ஆள் .அனுப்பி விட்டார்கள். ஆனால் அவருக்காக மும்தாஜ் அழுத அழுகை இயற்கையாக இல்லையே? சினிமா!
ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் ஹைலைட் விஸ்வரூபம் 2 .பாடல் வெளியீட்டு வைபவம்தான்,கமல்,ஸ்ருதிஹாசன்,ஜிப்ரான் என அசத்திவிட்டார்கள்.சூப்பர்.!
“தேசபக்தி பாடலுக்கு என்ன ராகம்? அது ‘தேஜ்’!அந்த ராகத்துக்கு பாடல் எழுதும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.”என்ற கமல் அப்படியே ஜதி சொல்லி பாடியது,கூடவே ஸ்ருதிஹாசன் இணைந்து பாடியது செம. இனிமையான பாடல்.
“ஸ்ருதிக்கு இந்த பெயரை வைத்தபோதே பின்னாளில் பெயருக்கேற்ப பாடுவார் என்று ஆசைப்பட்டோம்.அது நடந்திருக்கிறது”என்று பெருமையுடன் சொல்லிக்கொண்டார் கமல்.
இது தந்தையின் பெருமிதம்! அப்பாவை பார்வையாளர் வரிசைக்கு அனுப்பிவிட்டு ஸ்ருதி பாடியது மகளின் பெருமிதம்.மீசையை கமல் ஸ்டைலாக முறுக்கிவிட்டுக் கொண்டது அப்பனின் கர்வம்.
பாதம் தொட்டு வணங்கிய மகளை தூக்கிவிட்டு “நான் எழுதிய அழகான கவிதை இதுதான்,இந்த கவிதையை எழுதும்போது எனது அம்மாவின் நினைவு.! அதனால்தான் ஸ்ருதி ராஜலட்சுமிஹாசன் என பெயர் வைத்தோம். ‘எவனென்று நினைத்தாய்’பாடல் எனது அரசியல் பாடலாகவுமாகி விட்டது “என்றார் கமல்.
” விஸ்வரூபம் மறக்க முடியாத சம்பவம் எது” என்று பார்வையாளர் கேட்ட கேள்விக்கு “யாரும் இடைஞ்சல் பண்ணலேன்னா எதுவுமே கஷ்டமில்லிங்க” என்று சொன்ன பதிலில் அரசியலும் இருந்தது. எதிர்வரும் விளைவுகளை சந்திக்கும் துணிச்சல் தெரிந்தது.
“சினிமாவை விட்டு வெளியேறாதிங்க?” இது இன்னொருவரின் கேள்வி.
“இன்னும் பெரிய வேலை வெளியில்தான் இருக்கிறது.எனது ரசிகர்கள்,மற்றும் மக்களை வேறு ஒரு தளத்துக்கு கொண்டு செல்கிற வேலை அது. எனது இடத்துக்கு என்னைவிட சிறந்த கலைஞர்கள் வருவார்கள் .என் சேர்ல பலர் உட்காரனும்” என்கிற தனது ஆசையை பளிச்சென சொன்னார் கமல்.
பிக்பாஸ் வீட்டுக்குள் என்ன நடந்தது?
பாலாஜி பளிச்சென இருந்தார் .தாடி மிஸ்ஸிங்,
“இனிமே படிப்படியான மாற்றம் இருக்கும்.”என்று இவர் சொன்னாலும் மனைவி நித்யாவுக்கு “திருந்துனா சரி.ஆனா எனக்கு சேரணும்னு தோணலய” என்பதுதான் அவரது நிலையாக இருந்தது.
“குளியல் அறையில் கேமரா இல்லை.அப்படி செஞ்சுதான் டி ஆர்,பி ரேட்டை ஏத்தனும்கிற அவசியம் இவங்களுக்கு இல்லை”என்று உடை மாற்றும் பிரச்னைக்கு உத்திரவாதம் கமல் வழியாக மும்தாஜ் அன்ட் கோ வினருக்கு கிடைத்தது.
எவிக்சனில் வெளியில் வந்த மமதியிடம் கமல் சொன்ன தேவர் மகன் மேட்டர் புதிசு.
“ஆறேழு மாதமாக நடிக்காமல் இருந்தார் சிவாஜி. தேவர் மகனில் அவரை வைத்து ஏழுநாள் ஷூட்டிங் எடுத்தோம். அப்புறம் ஒரு மாத இடைவெளி விட்டு திரும்பவும் செட்டுக்கு வந்தார், ரஷ் பார்க்கலாமா என்றார். பார்த்தார்.
“செலவு இல்லேன்னா சில சீன்களை திரும்பவும் எடுக்கலாமா? என்றார்.
“நல்லாத்தானே அண்ணே இருக்கு?”
“இல்லப்பா சில சீன் துரு புடிச்சிருக்கு “என்றாராம் .
அது கலைஞனின் கவலை. இல்லை இல்லை அக்கறை!