வயதாகி விட்டால் காதல் என்ன செத்தாவிடும்?
அது அழகும் பார்ப்பதில்லை .அறிவையும் சோதிப்பதில்லை. அதை முதுமையும் விலக்குவதில்லை. எண்பது வயதிலும் காதல் தலை நீட்டும். அது பிழையும் இல்லை.
இயக்குநர் இமயம் பாரதிராஜா எழுதி இயக்கி நடித்திருக்கும் படம் ‘ஓம்’ .
“வயதான மனுசன்யா ..எதோ மந்திரம் சொல்லி பிராயச்சித்தம் தேடுற கதையா இருக்கும் போல இருக்கு” என்று யாராவது நினைத்தால் பிள்ளையாருக்கு முன்னால் நின்று மூணு உக்கி போட்டு விடுங்கள். அதாவது தோப்புக்கரணம்.
‘ஓம்’ என்றால் ஓல்ட் மேன் என்பதின் சுருக்கமாம். பார்த்திபன் சொல்லித்தான் தெரியும்.!அதற்கு ‘ஓல்டு மங் ‘ என்கிற விளக்கமும் சொல்லி அந்த திரவத்துக்கு கோக் தான் காம்பினேஷன் என்பதையும் ‘கிக்’ ஏத்தி விட்டு விட்டார். காம்பினேஷன் எது என்பதை ஒரு பெண்தான் அவரிடம் கேட்டுத்தெரிந்து கொண்டிருக்கிறார் என்பதுதான் சிறப்பு.
இசை வெளியீட்டுவிழா! வழக்கம் போல பார்த்திபன்.
“தனக்கு 5௦ வயதுக்கு மேல் போய்விடக்கூடாது என்பதில் பாரதிராஜா தெளிவாக இருக்கிறார். காதலும் காதல் சார்ந்த இடமும்தான் பாரதிராஜா.இரண்டையும் பிரிக்கவே முடியாது.
ஒருத்தன் டாக்டரிடம் போய் கை நடுங்குது சார் அதை நிறுத்தனும் என்று சொல்லியிருக்கிறான். அதனால் என்ன குடிப்பழக்கத்தை நிறுத்திடலாம்னார்.
அட அதுக்கில்ல சார். கை நடுங்கிறதால் கிளாசை பிடிக்க முடியல .கீழே விழுந்து கிளாஸ் உடையிது. அதனால கை நடுக்கத்தை நிறுத்தனும்னான். அது மாதிரி பாரதிராஜாவிடமிருந்து காதலைப் பிரித்து பார்க்க முடியாது” என்றார் பார்த்திபன்.
அய்யா….பார்த்திபனையும் குசும்பையும் பிரிக்கவே முடியாது சாமி!