சுசி கணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டைச் கூறியுள்ள கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது,
‘மீடூ’ மூவ்மென்ட் கடந்த 3 வருடங்களாக உலகம் முழுவதும் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அது, தாமதமாக இந்தியாவுக்கு வந்துள்ளது. கடந்த 3 மாதங்களாக பாலிவுட்டில் இந்த விஷயம் பேசப்பட்டு, தற்போது தென்னிந்தியாவிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.ஒரு பெண் தானாக முன்வந்து தன்னைப் பற்றி தவறாகச் சொல்ல மாட்டார். இது ஒன்றும் பெருமைப்படக்கூடிய விஷயம் கிடையாது. உங்களைப் பற்றிய எல்லா விஷயங்களையும் கேலிக்குள்ளாக்குகிற விஷயம் இது. அந்த அனுபவத்தைச் சொல்லித் தன்னைச் சிறுமைப்படுத்திக் கொள்கிற அவசியம் எந்தப் பெண்ணுக்கும் இல்லை. ஆனால், ஏன் இதுபோன்ற அத்துமீறல்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்ற கேள்வி மட்டும் எல்லாப்பெண்களுக்கும் இருக்கிறது.இந்த விஷயத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசும்போது, என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்று தெரிந்துதான் ஒரு பெண் வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறாள். ஏனென்றால், அந்தக் குரல் இன்னும் வலுப்பெற வேண்டும். நிறைய பெண்கள் தைரியமாக தங்கள் பிரச்சினைகளைப் பேச வேண்டும். பணியிடங்களில் சம உரிமை பேணப்பட வேண்டும். அவளையும் சக மனுஷியாக சுயமரியாதையுடன் நடத்த வேண்டும். இந்த விஷயங்களை முன்னிறுத்திதான்’மீடூ’ மூவ்மென்ட் நடந்து கொண்டிருக்கிறது.
சட்ட ரீதியாக இதை நிரூபித்து, சம்பந்தப்பட்டவர்களை ஜெயிலுக்கு அனுப்புவது என்பது எவ்வளவு கஷ்டமான விஷயம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஏனென்றால், ஆதாரங்கள் இருந்தே பாலியல் தொடர்பான வழக்குகளில் இங்கு எவ்வளவு பேருக்கு நீதி கிடைக்கிறது என்பதும் எல்லோருக்கும் தெரியும்.’மீடூ’ மூவ்மென்ட் மூலம் அது யார் என்று சொல்லும் தைரியம் இன்று வந்திருக்கிறது. அதை அவர் மறுக்கிறார் என்றால், மறுக்கட்டும்.உன்னை நம்பி காரில் ஏறினேன். ஆனால், நீ அப்படி நடந்து கொண்டாய். நம்பிக்கையைச் சிதைத்து விட்டாய். மலையாள சினிமாவை எடுத்துக்கொண்டால், பாதிக்கப்பட்ட ஒரு நடிகைக்காக எல்லா நடிகர் – நடிகைகளும் ஒன்று கூடுகிறார்கள். அதற்கான நீதி கிடைக்கும்வரை அவர்கள் பின்வாங்குவதில்லை.அப்படியொரு சூழ்நிலை தமிழ் சினிமாவில் வந்தால், சுசி கணேசன் மாதிரியான ஆட்கள் இப்படித் துள்ள வேண்டிய அவசியமில்லை.இங்குள்ள இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் எல்லாமே பாய்ஸ் கிளப் தான். இவர்களின் படைப்புகளில் தொடர்ந்து பெண்களை சிறுமைப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர். முதலில் உங்கள் படைப்புகளில் பெண்ணைச் சமமாக நடத்தியபிறகு, பிறகு பெண்ணுக்கான நீதி குறித்துக் குரல் கொடுங்கள். வியாபாரத்திற்காகப் பெண்ணை ஒரு படத்தில் எப்படி வேண்டுமானாலும் சித்தரிப்பேன் என்று கொள்கை வைத்திருப்பவர்கள், எந்த விதத்திலும் பெண்ணுக்கான நீதியைப் பெற்றுத்தர மாட்டார்கள்” இவ்வாறு அவர் கூறியுள்ளார் .