தல அஜித்தோ தனது மன்றங்களை கலைத்து விட்டவர். அவரது ரசிகர்கள் தற்போது பல கட்சிகளில் இருக்கிறார்கள். கட்சியா,தலயா என்று கேட்டால் தயக்கம் இல்லாமல் அஜித் பக்கம்தான் நிற்பார்கள்.அவர்கள் விஸ்வாசம் படத்தின் கலெக்ஷனை 20 சதவிகித வித்தியாசத்தில் முன்னணியில் வைத்திருக்கிறார்கள். சந்தடி சாக்கில் ரஜினி-அஜித் மோதலில் குளிர் காய நினைத்திருக்கிறது பிஜேபி. அஜித்தை வல்லவர் நல்லவர் என புகழ்வது மாதிரி தூண்டிலை போட்டிருக்கிறது.மத சார்பற்ற சாதிகளுக்கு அப்பாற்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் அஜித்குமாரின் நிலைபாட்டுக்கு வேட்டு வைக்கும் இந்த மறைமுக முயற்சியை தகர்க்கும்
விதமாக அஜித் குமாரின் அறிக்கை அமைந்திருக்கிறது.
“நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த திரைப்படங்களில் கூட அரசியல் சாயம் வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக உள்ளவன் என்பது அனைவரும் அறித்ததே. என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே என்பதை நான் தெளிவாக புரிந்து வைத்து இருப்பதே இதற்குக் காரணம்.
சில வருடங்களுக்கு முன்னர் என் ரசிகர் இயக்கங்களை நான் கலைத்ததும் இந்த பின்னணியில் தான், என் மீதோ, என் ரசிகர்கள் மீதோ , என் ரசிகர் இயக்கங்களின் மீதோ எந்த விதமான அரசியல் சாயம் வந்து விடக்கூடாது என்று நான் சிந்தித்ததின் சீரிய முடிவு அது.என்னுடைய இந்த முடிவுக்குப் பிறகு கூட சில அரசியல் திகழ்வுகளுடன் என் பெயரையோ, என் ரசிகர்கள் பெயரையோ சம்பந்தபடுத்தி ஒரு சில செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. தேர்தல் வரும் இந்த நேரத்தில் இத்தகைய செய்திகள் எனக்கு அரசியல் ஆசை வந்து விட்டதோ என்ற ஐயப்பாட்டை பொதுமக்களிடையே விதைக்கும்.இந்த தருணத்தில் நான் அனைவருக்கும் தெரிவிக்க விழைவது என்னவென்றால் எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை. ஒரு சராசரி பொது ஜனமாக வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே எனது உச்சகட்ட அரசியல் தொடர்பு. நான் என் ரசிகர்களை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவு அளியுங்கள் என்றோவாக்களியுங்கள் என்றோ எப்பொழுதும் நிர்பந்தித்தது இல்லை, நிர்பந்திக்கவும் மாட்டேன்.
நான் சினிமாவில் தொழில் முறையாக வந்தவன். நான் அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ இங்கு வரவில்லை. என் ரசிகர்களுக்கும் அதையேதான் நான் வலியுறுத்திகிறேன். அரசியல் சார்ந்த எந்த ஒரு வெளிப்பாட்டை நான் தெரிவிப்பதில்லை. என் ரசிகர்களும் அவ்வாறே இருக்க வேண்டும் என விரும்புகிறேன். சமூக வலைதளங்களில் தரமற்ற முறையில் மற்ற நடிகர்களை, விமர்சகர்களை வசை பாடுவதை நான் என்றுமே ஆதரிப்பதில்லை. நம்மை உற்றுப் பார்க்கும் இந்த உலகம் இத்தகைய செயல்களை மன்னிப்பதில்ல.அரசியலில் எனக்கும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு. அதை தான் யார் மீதும் திணிப்பது இல்லை. மற்றவர்கள் கருத்தை என் மேல் திணிக்க விட்டதும் இல்லை. என் ரசிகர்களிடம் இதையேதான் நான் எதிர்பார்க்கிறேன். உங்கள் அரசியல் கருத்து உங்களுடையதாகவே இருக்கட்டும். என் பெயரோ, என் புகைப்படமோ எத்த ஒரு அரசியல் திகழ்விலும் இடம் பெறுவதை நான் சற்றும் விரும்புவதில்லை. எனது ரசிகர்களிடம் எனது வேண்டுகோன் என்னவென்றால் நான் உங்களிடம் எதிர்பார்ப்பது எல்லாம், மாணவர்கள் தங்களது கல்வியில் கவனம் செலுத்துவதும், தொழில் மற்றும் பணியில் உள்ளோர் தங்களது கடமையைச் செவ்வனே செய்வதும், சட்டம் ஒழுங்கை மதித்து நடந்து கொள்வதும், ஆரோக்கியத்தின் மீது கவனம் வைப்பதும்,வேற்றுமை கலைந்து ஒற்றுமையுடன் இருப்பது, மற்றவர்களுக்கு பரஸ்பர மரியாதைசெலுத்துவதும், ஆகியவை தான். அதுவே நீங்கள் எனக்கு செய்யும் அன்பு. வாழு வாழ விடு”இவ்வாறு அவர் கூறியுள்ளார்.