நல்லதமிழில் பெயர் வைக்கப்பட்டு நல்ல மனங்களால் பாராட்டப்பெற்று மக்களின் மத்தியில் வெற்றி பெற்றிருக்கிற படங்களில் நெடுநல்வாடை முக்கியமானது.
கல்லூரிக்கால நண்பர்கள் ஐம்பது பேர் சேர்ந்து அவர்களின் நண்பர் செல்வக்கண்ணனை திரைப்பட இயக்குநராக கொண்டுவர முயற்சி செய்து அவர்களின் முதலீட்டால் தயாரிக்கப்பட்ட படம்.
அந்தப் படத்தின் வெற்றி விழாவுக்கு கவிப்பேரரசு வைரமுத்து வந்து அவர்களை வாழ்த்தினார்.
இனி கவிஞர் என்ன பேசினார் என்பதை வாசிக்கலாம்.
“சில மேடைகளுக்கு அசைபோட்டு கொண்டு வருவது உண்டு.
இன்னும் சில மேடைகளுக்கு எப்படிப் பேச வேண்டும் என்று ஒத்திகை பார்த்து வருவோம். இந்த மேடைக்கு வெள்ளைத் தாளாக வந்தேன். செல்வகண்ணன் என்னை உருக்கி விட்டார். இந்த வாழ்க்கை செல்வகண்ணனுக்கு மட்டும் அல்ல. எனக்கும் பொருந்தும். ஒரு குடும்பத்தில் இருமுகிற ஒரு தாத்தா இருந்தால் எவ்வளவு பாதுகாப்பு தெரியுமா? வெற்றிலை இடிக்கிற ஒரு கிழவி இருந்தால் எவ்வளவு நம்பிக்கை தெரியுமா?கிழவர்கள் கிழவிகள் இருக்கிற வீட்டுக்குள் தீய சக்திகள் நுழைய முடியாது தகப்பனுக்குத் தெரியாது,தாய்க்குத் தெரியாது.கெட்ட எண்ணத்துடன் அசைகிற ஒருவன் வந்து போகிறான் என்று! கிழவிக்குத் தெரியும். கிழவனுக்குத் தெரியும். கிழவர்களும் கிழவிகளும் சம்பளம் வாங்காத காவல்காரர்கள். அந்த பாசத்தை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்,. தம்பி செல்வகண்ணன் எனக்கு ஊதியம் தரவில்லை என்றார். “தம்பி நீ எனக்கு இந்தப்படத்தை விட பெரிய ஊதியம் தரமுடியுமா? ஒரு இயக்குநர் வெற்றி விழா மேடையில் கவிஞனின் வரிகளுக்கு கண்ணீர் சிந்தி இருக்கிறான் என்றால் அதைவிட எனக்குப் பெரிய ஊதியம் ஏது? கைதட்டலை தங்கக் காசு போல செலவழிக்கிற எனது ஊடக நண்பர்கள் கைதட்டி மகிழ்ந்தார்களே அதை விட பெரிய ஊதியம் உண்டா? தம்பி செல்வகண்ணனுக்கு நான் இலக்கியத்தின் சார்பாக நன்றி சொல்கிறேன். தமிழ் நாட்டில் தமிழ்ப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்று ஒரு சட்டமே கொண்டு வந்து தமிழ் வளர்த்தார் கலைஞர் .( கலைஞருக்கும் அவருக்கும் இடையே நிகழ்ந்த நிகழ்வை நினைவு படுத்திக் கொண்டபோது போது கண்களில் கசிவு.) , ஈராயிரம் ஆண்டுக்கு முன்பு வெளிவந்த ஒரு இலக்கியத்தின் தலைப்பை இந்த டிஜிட்டல் யுகத்தில் ஒரு இளைஞன் வைத்திருக்கிறான் என்றால் தமிழின் பெருமையைப் பாருங்கள். இளைய இயக்குநர்களை கேட்டுக்கொள்கிறேன். நல்ல தமிழில் படங்களுக்கு பெயர் சூட்டுங்கள். கொட்டிக்கிடக்கின்றன தமிழ்ப் பெயர்கள்..தமிழின் வேர்ச்சொற்கள் எவ்வளவோ இருக்கிறது. நல்ல தலைப்பு வேண்டுமென்றால் என்னிடம் வாருங்கள். இந்தப்பொள்ளாச்சி விவகாரம் குறித்து தமிழகமும் அறிஞர்களும் ,நீதி அரசர்களும் உலகமும், சமூகமும் தவிக்கிற தவிப்பை நீங்கள் பார்க்கிறீர்கள். நான் பெரிதும் கவலைப்படுகிறேன். அந்தப் பெண்ணின் கதறல் தூக்கத்தை கெடுக்கிறது. இவள் ஒருத்தி மட்டும்தானா? இந்த குரல் மட்டும்தான் கேட்கப்பட்டு இருக்கிறதா? இன்னும் கேளாத குரல்கள் எத்தனை இருக்கிறது? பொள்ளாச்சி மட்டும்தானா? தமிழ்நாட்டில் வெவ்வேறு ஊர்களில்,வெவ்வேறு பெயர்களில் இது நிகழ்ந்து இருக்குமா? நாம் தெரியாது இருந்தால் நிகழவில்லை என்று அர்த்தமா? இதற்கான அடிப்படை காரணம் ஒன்று உண்டு. மனிதன் இயல்பாகவே மிருகத்தின் குழந்தை. அந்த மிருகங்களை சரிப்படுத்தத்தான் கல்வி,கலை. அன்பு,பாசம் உறவு! அவைகளினால் பண்படாத பைத்தியங்கள் தான் இப்படியான செயலை செய்திருக்கிறார்கள். அந்த மனநோய்களை தயாரிப்பதில் இந்த சமூகத்துக்குரிய பங்கு என்ன? நடுத்தெருவில் நிறுத்தி தோல் உரியுங்கள் என்று சிலர் சொல்கிறார்கள். அதைவிட அவர்களின் மனதில் இருக்கும் மிருகத்தோலை உரிக்கவேண்டும். அதைத்தான் கலை செய்கிறது. இதைத் தான் நெடுநல்வாடை செய்தது. ஒன்று சொல்லட்டுமா? இந்தப்படம் சிறந்தபடம் என்று தெரியும். ஆனால் வணிக ரீதியாக வெற்றிபெறுமா?என்ற சந்தேகம் இருந்தது இப்போது வணிக ரீதியான வெற்றியையும் பெற்றிருக்கிறது. அதற்கு காரணம் ஊடகங்கள் தான். படத்தில் சிறப்பாக நடித்த பூ ராமுக்கு நிச்சயமாக மாநில விருதாவது கிடைக்கும் என்று நம்புகிறேன். ஜோஸ் பிராங்க்ளின் இசையில் இளையராஜாவின் சாயல் இருப்பதாய் ஒரு பத்திரிகை எழுதி இருந்தது. இது உனக்குப் பாராட்டு தம்பி. ஒளிப்பதிவை கண்களில் ஒற்றிக்கொள்ளலாம். எடிட்டர் காசி விஸ்வநாதன் இந்தப்படத்தின் பொக்கிஷம். எஸ்கேப்.ஆர்டிஸ்ட் மதனுக்கு நன்றி. தமிழ் திரைப்படப் பாடல்கள் சற்றே தொய்வடைந்து இருக்கிறது. படத்தின் நீளமும் குறைந்து விட்டது. 2 மணிநேரம் பத்து நிமிடங்கள் உள்ள படத்தில் பாடல்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. வாழைப்பழம் ஏழைகளின் ஆப்பிள் என்பார்கள். அதுபோல் திரைப்படப் பாடல் பாமரனின் கவிதை என்பேன். இந்தப்படத்தில் பங்காற்றிய அனைவரையும் தனித்தனியாக வாழ்த்துகிறேன்” என்று அனைவரின் பெயரையும் வாசித்து விடை பெற்றார் கவிப்பேரரசு. |