திரை உலகத்துக்கு இன்று கருப்பு நாள்.
இயக்குநர் மகேந்திரனின் மறைவுக்கு முன்னணி நடிகர்கள் பலரும் வந்து தங்களின் இறுதி மரியாதையை செலுத்தினார்கள்.
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்,ரஜினிகாந்த் ,சிவகுமார் ,பாரதிராஜா உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் வந்திருந்து தங்களது கவலையைப் பதிவு செய்தார்கள்.
கமல் கூறியதாவது.,
“மகேந்திரனுடன் நீண்ட நாள் நட்பு எனக்குண்டு. படங்கள் நாங்கள் குறைவாகச் செய்திருந்தாலும், நட்பு வலுவாகவே இருந்தது. பக்கத்து ஊர்க்காரர்.
‘தங்கப்பதக்கம்’ காலத்திலிருந்தே அவரைத் தெரியும். பிறகு கூடி பல படங்கள் செய்திருக்கிறோம். ஆனால், முதலில் ‘முள்ளும் மலரும்’ படத்தில்தான் நான் நடிப்பதாக இருந்தது. தமிழ்ப் படங்கள் அதிகமாகச் செய்ய ஆர்வமில்லாமல் இருந்த பாலு மகேந்திராவையும் இவரையும் என்னுடைய வீட்டில் சந்திக்க வைத்தது இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது. இரண்டு பேர் கையையும் சேர்த்துவைத்து, ‘வெற்றிப் படங்கள் எடுங்கள்’ என்று சொன்னேன். அதுபோலவே அவர்கள் செய்தார்கள்.
அந்தப் படத்துக்கு கிட்டத்தட்ட புரொடக்ஷன் மேனேஜர் மாதிரி எல்லாம் வேலை பார்த்துள்ளேன். ஏனென்றால், படம் அற்புதமான படம் என்று எனக்குத் தெரியும். எந்தவொரு காரணத்தைக் கொண்டும் நின்றுவிடக்கூடாது என்று நாங்கள் அனைவரும் சேர்த்து வெளிக்கொண்டு வந்த படம்தான் ‘முள்ளும் மலரும்’. அதற்குப் பிறகு பல அற்புதமான படங்களைக் கொடுத்துள்ளார்.
அவரைப் பார்த்து, சினிமா எடுக்க வேண்டும் என்று ஒரு இளைஞர் கூட்டமே வந்தது என்று சொன்னால் மிகையாகாது. அவரது முடிவு, உச்சத்தைத் தொட்ட பிறகுதான் ஏற்பட்டு இருக்கிறது என்பதில் சந்தோஷம். பல திறமைசாலிகள் திறமை வெளிவராமலேயே சென்றதைப் பார்த்திருக்கிறேன். இவருடைய நினைவுகள் தமிழ் சினிமாவில் என்றும் தாங்கி நிற்கும்.”என்றார்.
தென்னிந்திய நடிகர் சங்கம்,தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் தங்களின் இரங்கலை பதிவு செய்திருந்தனர்.
ரஜினிகாந்த் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
“சினிமாவைத் தாண்டிய நட்பு எங்களுக்கு இருந்தது. எனக்குள் இருந்த இன்னொரு ரஜினியை அடையாளம் காட்டியவர் மகேந்திரன் சார். தமிழ்ச்சினிமா இருக்கும்வரை அவருடைய புகழும் பெருமையும் சேர்ந்தே வாழ்ந்து கொண்டிருக்கும்” என்று கூறினார் ரஜினி.