தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் வருகிற 14ந்தேதி மாலை நடக்கிறது. சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஓட்டலில் இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நாசர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றது. நாசர் தலைவராகவும் விஷால் பொதுச்செயலாளராகவும் கார்த்தி பொருளாளராகவும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில்,இவர்களது பதவிக்காலம் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன்நிறைவடைந்தது.என்றாலும்,நடிகர் சங்க கட்டட பணிகள் நடந்து வருவதால் அதையே காரணம் காட்டி 6 மாத காலத்துக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், 6 மாத கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
அதே சமயம்,கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பொன்வண்ணன்ஆகியோர் , “தேர்தலுக்காக ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து அதன்பின்னர் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
விரைவில் நடிகர் சங்கத் தேர்தல் தேதியை ஓய்வுபெற்ற நீதிபதி அறிவிப்பார். தேர்தலுக்கு முன்பாக அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் நூற்றுக்கு நூறு சதவிகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளன” என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் மீண்டும் நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் வரும் 14-ம் தேதி அன்று தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற உள்ளது. தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
மீண்டும் தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. பொருளாளராக பூச்சி முருகன் போட்டியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாசரை எதிர்த்து ராதிகா சரத்குமார் தலைமையிலான அணியும் களமிறங்கலாம் என தெரிகிறது.