வருகிற 18 ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளது.இதற்காக சரத்குமார். விஷால் அணிகளை சேர்ந்த இரு தரப்பினரும் தேர்தலில் வெற்றி பெற தீவிரமாக ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சரத்குமார் எழும்பூர் நீதிமன்றில் விஷால் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இதற்கிடையே நடிகர் விஷாலுக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை அண்ணாநகரில் வசித்து வரும் விஷால் இதுபற்றி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
அதில் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் எனக்கு தேவையில்லாத எண்களில் இருந்து போன் செய்து பேசும் சிலர் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே எனது வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணைமேற்க்கொண்டுள்ளனர். அண்ணா நகரில் உள்ள விஷாலின் வீடு மற்றும் அலுவலகம் அருகில் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.எந்தெந்த எண்களில் இருந்து மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளது என்பது பற்றிய விபரங்களையும் விஷால் போலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.விஷாலுக்கு மிரட்டல் விடுத்தவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.