ஏ.டி.எம் பட நிறுவனம் மூலம் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற படத்தைத் தயாரித்தவர் மதுராஜ்.. இவர் பாண்டிராஜின் மெரீனா படத்தை கேரளாவில் வெளியிடவும், அதை மலையாளத்தில் டப் செய்யவும் ரூ 2.50 லட்சத்தை பாண்டிராஜுக்குக் கொடுத்ததாக கூறப்படுகிறது. பணத்தை வாங்கிக் கொண்டு ஒப்பந்தம் போட்ட பாண்டிராஜ், தனது பசங்க பட நிறுவன லெட்டர் பேடில் மெரீனா மலையாள உரிமையை எழுதிக் கொடுத்தாராம் ஆனால் இதையே ஒப்பந்தப் பத்திரத்தில் முரண்பாடாகக் குறிப்பிட்டு, லேப் லெட்டரையும் தராமல் இழுத்தடித்தால் மதுராஜால் அப் படத்தை வெளியிட முடியவில்லை என்கிறார்கள்.. பணத்தையாவது திரும்பக் கொடுங்கள் என்று கேட்டும், கொடுக்காமல் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக பணத்தைத் தராமல் இழுத்தடிக்கிறாராம். பாண்டிராஜ். உஷாராக, தான் வாங்கிய 2.50 லட்சத்தை ஆவணத்தில் குறிப்பிடாமல், வெறும் 1 லட்சம் என்று குறிப்பிட்டுள்ளார். அன்றைக்கு நட்புடன் இருந்ததால், பார்த்துக் கொள்ளலாம் என்று அமைதியாக இருந்த மதுராஜுக்கு இன்று பணத்தைத் திரும்பப் பெறுவதில் பெரும் சிக்கல். எனவே தனக்கு முழுப் பணத்தையும் வட்டியுடன் திருப்பிச் செலுத்தும் வரை பசங்க 2 படத்தை வெளியிடத் தடைகேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளாராம் மதுராஜ். இதன் காரணமாக பசங்க-2 வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.