எழுத்து ,இயக்கம்: சுசீந்திரன்,ஒளிப்பதிவு : ஆர்.பி. குருதேவ், இசை : டி.இமான் ,எடிட்டிங் : ஆண்டனி
பாரதிராஜா,சசிகுமார்,மீனாட்சி,சூரி ,
*********************
வெண்ணிலா கபடிக் குழுவுக்கு அடுத்து கபடி விளையாட்டை மையமாக வைத்து வெளி வந்திருக்கிற படம்.
ஆனால் இது முழுக்க முழுக்க பெண்கள் கபடி படம்.
அன்றாடங்காய்ச்சிகளில் எவ்வளவு பேர் தங்களின் திறமையை வெளிப்படுத்துகிற வாய்ப்புகளை இழக்கும் அபாயத்தில் இருக்கிறார்கள் என்பதை கருவாக வைத்துப் பின்னப்பட்ட கதை.ஒடுக்கப்படுகிற வீராங்கனைகளை உயரத்துக்குக் கொண்டு செல்கிற இரண்டு பயிற்சியாளர்கள் எதிர்கொள்ளும் வலிகள் திரைக்கதையின் இழையோட்டம்.அற்புதம்,அழகியல்,
ஆனால் பாரதிராஜா, சசிகுமார் போன்ற பயிற்சியாளர்களை எல்லா இடங்களிலும் பார்க்க முடியுமா?
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு கபடி..உலக அளவில் வளர்ந்து வரும் அந்த கலைக்கு உரியவர்களான தமிழர்களை வடக்கே இருப்பவர்கள் தோற்கடிக்க முயற்சிக்கிறார்கள். அழுத்தப் பார்க்கிறார்கள் என்று சொல்லலாம்.விளையாட்டில் இது இயல்புதான்!
ஆனால் ,அது இயல்பாக இல்லாமல் ஆதிக்கம் செலுத்தி அழிக்கப்படுகிற அபாயத்துக்கு உள்ளாகிறது. கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பு போன்ற பலன்களை இழக்கும் நிலை ஏற்படுகிறது,இதைத்தான் இயக்குநர் சுசீந்திரன் சொல்ல நினைக்கிறார் என எடுத்துக் கொள்ளலாம். ( இயக்குநர் முரண்படவில்லை என்றால் மகிழ்ச்சி.)
படத்தில் காதல் கிடையாது.கவர்ச்சி இல்லை.கெட்ட வார்த்தைகள் இல்லை. பெண்கள் விளையாடுகிற கபடி விளையாட்டில் கேமராவின் பார்வையை “கர்ண ஆங்கிளில் ‘காட்ட முடியும் என்றாலும் அதை தவிர்த்திருக்கிற ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவை ஆயிரம் முறை பாராட்டினாலும் தவறில்லை. கலையரசியின் கவி சொல்லும் காதலன் கேரக்டர் சூப்பர்!
பெண்கள் விளையாடும் போது பல ஆண்களின் ( ? ) வக்கிரம் கொக்கரிப்பதை இயல்பாக காணலாம். படத்தில் அதை சுசி பதிவு செய்யத் தவறவில்லை. பாரதிராஜா, சசிகுமார் வழியாகவும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
விளையாட்டாக இருந்தாலும் அரசியலாக இருந்தாலும் அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர்கள் தான் வில்லன்களாக இருப்பார்கள். அந்த உண்மை படத்தில் பளீரென அறை விடுகிறது. அந்த வில்லன்களால் ஒரே வர்க்கமான பாரதிராஜா-சசிகுமார் போன்றோர் மோதிக்கொள்கிற அபாயமும் வரும் என்பதையும் சொல்லி இருக்கிறார்கள்.
உண்மையான கபடி வீராங்கனைகளை பயன்படுத்தி இருக்கிறார்கள் அதனால் போலித்தனம் இல்லை.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு உரிய வேடம் ,மனிதர் பொங்குகிறார்.அவர் போக்கில் விட்டிருந்தால் கடைசி காட்சியில் அமைச்சரை அடிக்கவும் செய்திருப்பார். சசிகுமார் கேரக்டர் உயர்வாக அமைந்திருக்கிறது. மத்திய அரசுப் பணியை விடுவதற்கு மனம் வருமா? பாரதி-சசி பனிப் போரை அந்த காட்சிதான் அகற்றுகிறது.
டி.இமானின் பின்னணி இசை ஆர்ப்பரிக்காமல் அமைதியான நதியின் ஓசையாக இருப்பது பலம்.
பார்க்கவேண்டிய படம்.
சினிமா முரசத்தின் மார்க் 2.5 / 5