நடிகர் சங்க தேர்தலில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ராதாரவி,விஷால் ஆகியோர் மல்லுக்கட்டாத குறையாக ஒருவரைஒருவர் கடுமையாகத் தாக்கி பொது மேடையில் விமர்சனம் செய்து கொண்டனர். தேர்தலுக்கு பின் எவர் ஜெயித்தாலும் சமரசத்துக்கு இடமில்லை என பலரும் நினைத்துக் கொண்டிருக்க,தேர்தலில் விஷால் ஜெயித்து விட்டார் இதையடுத்து மீண்டும் ராதாரவி விஷால் இணைவார்களா என ஆளாளுக்கு கோடம்பாக்கத்தில் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்க இருவரும் சத்தமில்லாமல் ‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’ படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையா இயக்கவுள்ள மருது என்ற படத்திற்காக இணைந்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளனர். ஏன், இந்த படத்தில் ராதாரவியை நடிக்க வைத்தது ஏன் என்பது குறித்து இயக்குனர் முத்தையா கூறுகையில்,’கதையை தயார் செய்யும் போதே இந்த கதாபாத்திரத்திற்கு ராதாரவி தான் சரி என்று மனதில் பட்டது, அவரிடம் போய் இதை சொல்ல, ஹீரோவிற்கு சம்மதம் என்றால் நான் நடிக்கிறேன் என்றார்.விஷாலும், கதைக்கு தேவை என்றால் அவரையே கமிட் செய்யுங்கள் என்று கூற, ராதாரவியும் முழு மனதுடன் நடிக்க சம்மதித்து விட்டார்’ என கூறியுள்ளார்.விஷால் நடிக்கவுள்ள இந்த படம் கிராமிய கதை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடிக்கிறார் என்கிறார்கள்.