தமிழ்நாட்டில் மிகவும் பலவீனமான கட்சிகள் என்றால் காங்கிரஸ்,பா.ஜ.க. இந்த இரு கட்சிகளைத்தான் சொல்ல முடியும்.
பலவீனமான இதர தேசிய கட்சிகளும் இங்கு இருக்கின்றன.மாநில கட்சிகளோ தனித்து போட்டியிட்டு ஆட்சியைக் கைப்பற்றுகிற அளவுக்கு வலிமையானவையாகவும் இல்லை.
1967-ஆம் ஆண்டுக்குப் பின்னர் அதுவரை ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சியினால் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற இயலவில்லை.
இயன்றவரை திராவிடக் கட்சிகளின் தோளில்தான் காங்கிரஸ் சவாரி செய்து வருகிறது.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததால் தமிழ்நாட்டில் அந்த தேசியக் கட்சியை சுமக்க வேண்டிய நிர்ப்பந்தம்,கட்டாயம் ,திராவிடக் கட்சிகளுக்கு இருந்தது..
அந்த நிலை இப்போது இல்லை.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாததால் திமுகவை காங்கிரஸ் கட்டாயப்படுத்த முடியாது. ஆகவே வலுவான இன்னொரு ஆயுதம் கையில் இருப்பது நல்லது என்று காங்கிரஸ் நினைத்தால் அதில் தப்பில்லையே!
அதனால்தான் திமுகவுடன் கூட்டணியில் இருக்கிற காங்கிரஸ் இன்னொரு தோளை தேடுகிறது.
விஜய் பேசிய பேச்சுக்கு அதிமுகவினர் சீறி ,சினந்து,அதிகாரங்களை பாய விட்டிருக்கிறார்கள்.
அதை வன்மையாக கண்டித்திருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி.
’நடிகர் விஜய் அரசியல் பேசியதற்காக கல்லூரி நிர்வாகம் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறது. பிகில் திரைப்பட நிகழ்ச்சி நடத்தியதற்காக கல்லூரிக்கு தரப்பட்ட நோட்டீஸை உயர்கல்வித்துறை திரும்பப்பெற வேண்டும். நடிகர் விஜய் பொதுவாக பேசியதை அதிமுகவினருக்கு எதிராக பேசியதாக அமைச்சர் ஜெயக்குமார் தவறாக புரிந்து கொண்டுள்ளார். அதிமுகவினரும் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.
சென்னை சட்டக்கல்லூரி வளாகத்தில் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி ஆகியோர் பேசியுள்ளனர். அனைவருக்கும் பொதுவானவர் விஜய். அரசியல் கட்சி சார்பில்லாதவர். லட்சக்கணக்காண இளைஞர்களால் ஈர்க்கப்பட்டு இளைஞர்களால் போற்றப்படும் இளம் கலைஞன் விஜய். கல்லூரிக்கு தரப்பட்ட நோட்டீஸை திரும்பப்பெறாவிட்டால் ஆட்சியாளர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’’ என எச்சரித்துள்ளார்.
இவ்வளவு கடுமையான எச்சரிக்கையை திமுகழகம் எந்த அளவுக்கு மதிக்கும் என்பது தெரியவில்லை. காங்.கட்சியோ விஜய் ரசிகர்களை தனது ஆதரவாளர்களாக மாற்றும் வேலையில் இறங்கி இருக்கிறது.
ஆனால் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் எத்தகைய அரசியல் பண்ணக்கூடியவர் என்பது காங்.கட்சிக்கு தெரியாமல் இருக்க நியாயமில்லை. அனுபவம் பழசு!