ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ‘லைகா புரொடக்சன்ஸ்’ தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் ‘தர்பார்’.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்தப் படத்தில் இந்தி நடிகர்கள் சுனில் ஷெட்டி, பிரதீக் பப்பார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் முற்றிலும் முடிவடைந்த நிலையில் டப்பிங் உள்ளிட்ட இறுதி கட்டப்பணிகள் நடந்து வருகிறது. ரஜினிகாந்த் தான் நடித்த காட்சிகளுக்கு 3 நாட்களில் டப்பிங் பேசி முடித்துள்ளார். மற்ற நடிகர்களின் டப்பிங் வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் பின்னர் அனிரூத் பின்னணி இசை சேர்க்கும் பணியை தொடங்கவிருக்கிறார்.
படத்தின் முதல் பிரதியை டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் தயார் செய்துவிடுவதற்கு முருகதாஸ் திட்டமிட்டுள்ளார். டிசம்பர் மாத இறுதியில் சென்சார் செய்யப்பட்டு பொங்கலுக்கு படம் திரையிடப்படவுள்ளது.
‘தர்பார்’ படத்தின் மோசன் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 7-ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த ‘லைக்கா புரடக்ஷன்ஸ்’ முடிவு செய்துள்ளது.
விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி திரையுலகை சார்ந்த பிரபலமானவர்களை அழைத்து இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது.
.