சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.
இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு 13 பேர் பலியான நிலையில், அங்கு பலியானோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. மேலும் வைரஸ் தாக்குதலுக்கு 323 பேர் கூடுதலாக பாதிப்பு அடைந்து உள்ளனர்.இது குறித்து சீன தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா வைரஸ் 1,287 பேரிடம் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்து உள்ளது. இந்நிலையில், அங்குள்ள இந்தியர்களின் நிலைமை குறித்து தூதரகம் மூலம் கண்காணித்து வருவதாக இந்தியாவுக்கான சீன வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது,”சீனாவில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் மூலம் ஹூபே மாகாணத்தில் உள்ள மாணவர்களிடம் தொடர்பில் இருந்து வருகிறோம். அவர்களின் உடல்நிலை மற்றும் அவர்களுக்கு தேவையான வசதிகள் இந்திய தூதரகம் மூலமும், சீன அதிகாரிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. நாங்கள் சீன அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். இந்திய மாணவர்களை பாதுகாப்பான முறையில் தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம்”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீனா, ஹாங்காங் ,,உள்ளிட்ட நகரங்களில் மாஸ்க் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும்,அங்குள்ள வீதிகள் வெறிச்சோடி கிடப்பதாகவும் மக்கள் பெரும் பாலும் வீட்டுக்குள் முடங்கி இருப்பதாகவும் பெரும்பான்மையான பள்ளி,கல்லூரிகள்,அலுவலர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.