மூன்று மாதங்களாக கொரோனா லாக்டவுன் காரணமாக பொதுமக்களின் பொருளாதார நிலை மிகவும் மோசமாகி இருக்கிறது.
பலர் சாப்பாட்டுக்கே ததிங்கணத்தோம் போட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் மின்சார கட்டணம் ஒவ்வொருவருக்கும் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
நடிகர், நடிகைகளும் இதே புகாரை சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர். நடிகர் பிரசன்னா நடிகைகள் கார்த்திகா, டாப்ஸி, ஹூமா குரேஸி உட்பட பலர் இதே புகாரை தெரிவித்தனர்.பலர் மின்கட்டணம் குறித்து சமூக வலைத்தளங்களில் குமுறி வருகின்றனர். இயக்குநரும் நடிகருமான சேரன் தனது ட்விட்டரில் மின்கட்டணம் குறித்து கூறியுள்ளதாவது,
தமிழகம் முழுவதும் மின்வாரியத்துறையின் செயல்பாடுகளில் ஒரு தெளிவின்மை தென்படுகிறது. ஒவ்வொரு மாதத்திற்கான மின்கட்டணம் இதுவரை மாதாமாதம் கட்டிய தொகையிலிருந்து இரண்டு மூன்று மடங்காக பில் வந்திருக்கிறது. (கிராமங்களில் இருப்பவர்களுக்கும்). அதற்கான காரணம் சொல்லப்படவில்லை.
இதுபோன்ற காலகட்டங்களில் மக்களுக்கு சலுகையோடு செயல்பட வேண்டிய நிர்வாகம் இப்படி அதிகப்படியாக வசூலிக்க நினைப்பது கேள்வியை எழுப்புகிறது. இதை எங்கே எப்படி கேட்பது என்று தெரியாத அப்பாவி மக்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.
அந்த துறை சார்ந்த மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் கவனிப்பார்களாக. வேலையின்றி வீட்டிற்கு உணவிற்கு தேவையான பணம் சம்பாதிக்கவே கஷ்டப்படும் சூழலில், இது போன்ற விஷயங்கள் ஏழைகளை மிரட்டுகிறது
வீட்டு வாடகையே கட்டமுடியாதவர்கள் எங்கிருந்து மின்சார கட்டணம் இரண்டு மூன்று மடங்காக கட்டமுடியும்?
இதுபோன்ற நேரங்களில் தளர்வு அளிக்கவேண்டும் அரசு”. இவ்வாறு இயக்குநர் சேரன் கூறியுள்ளார்.
இப்பதிவை அவர், தமிழக முதல்வர் அலுவலகத்துக்கும் டேக் செய்துள்ளார். இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கு மின் கட்டணம் மூன்று மடங்கு அதிகமாக வந்திருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.