
கு.க.செல்வம் எம்.எல்.ஏ. திமுகவை விட்டு பாஜகவுக்கு மாறுவது உண்மைதான் என்று பெரும்பான்மையானவர்கள் சொன்னாலும் அதை மறுத்துக் கொண்டிருக்கிறார் செல்வம். திமுகவும் இவரை கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்திருக்கிறது.
இதைப்போல காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் குஷ்பு கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணையப்போகிறார் என்பதாக ஊடகங்களில் யூகங்கள் .
இதை குஷ்பூ மறுத்து இருக்கிறார். இந்த நிலையில்தான் அதிர்ச்சிகரமான ஒரு செய்தியை அவர் தன்னுடைய டிவிட்டர் தளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
“சஞ்சய் ஷர்மா என்கிறவர் போனில் இருந்து எனக்கு மிரட்டல்கள் வருகின்றன. என்னை கற்பழிக்கப் போவதாக அந்த போன் கால்ஸில் இருந்து பேசுகிறார்.அந்த கால் கொல் கத்தாவில் இருந்து வந்திருக்கிறது.இது தொடர்பாக கொல்கத்தா போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.”என்று சொல்லி அந்த போனின் எண்களையும் பகிர்ந்திருக்கிறார் . கொல்கத்தா முதல்வர் மம்தா பானர்ஜிக்கு இந்த பதிவு டேக் செய்யப்பட்டிருக்கிறது.
இத்துடன் “என்னை மிரட்டுகிறவன் நான் கற்பழிக்கப்படுவதற்கு உகந்தவள் ஏனெனில் நான் ஒரு முஸ்லீம் என்கிறான்.நமது இந்தியப்பிரதமர் இதுதான் உண்மையான கடவுள் ராம் பூமியா என்பதைச் சொல்லவேண்டும்.” என்றும் கேட்டிருக்கிறார் .
தன்னுடைய கட்சிக்கு இது தொடர்பாக புகார் எதுவும் சொல்லியிருக்கிறாரா என்பது தெரியவில்லை.
இது தொடர்பாக குஷ்பூவை தொடர்பு கொண்டபோது….
“இன்றும் வேறு எண்ணில் இருந்து மிரட்டல்கள் வந்தது. உன்னை மட்டுமல்ல உன்னுடைய குடும்பத்தையே சிதைத்தால்தான் புத்தி வரும் என்கிற மிரட்டல்கள். இதனால் நான் போலீசில் புகார் செய்திருக்கிறேன்.”என்று சொன்னவரிடம் “உங்கள் கட்சித்தலைமைக்கு புகார் செய்து விட்டீர்களா?” என்று கேட்டேன்.
“இல்லை. என்னை தனிப்பட்ட முறையில் மிரட்டியதற்கு கட்சியில் ஏன் புகார் செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.
“வேலைவெட்டியற்ற ஒரு கும்பல் இப்படி போன் செய்வதை தொழிலாக வைத்திருக்கிறது. இத்தகைய மிரட்டல் வருகிற போன் கால்களை பிளாக் செய்து விட்டாலும் வேறு எண்களில் இருந்து மிரட்டுகிறார்கள்.” என்கிறார்.
“நீங்கள் கட்சி மாறப்போவதாக வருகிற வதந்திகளை வைத்து இத்தகைய மிரட்டல்கள் வருகிறதா?”
“இல்லை.அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. இது வேலை வெட்டி இல்லாத ஒரு கோஷ்டி இப்படி அலைகிறது!“என்றார் .












