நேற்று காலையில் இருந்து ஒரு கடிதம் ஊடகம் சிலவற்றில் வெளியாகி இருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி எழுதியதாக சொல்லப்படுகிற அந்த கடிதத்தில் அவரது அரசியல் எதிர்காலம் ,உடல் நலம் பற்றிய முக்கிய விவரங்கள் அடங்கி இருக்கின்றன.
அந்த கடிதம் உண்மையிலேயே ரஜினியினால் எழுதப்பட்டதா, அல்லது யாரோ கிளப்பிவிட்டதா என்பதைப்பற்றி இந்த செய்தி எழுதப்படும்வரை கிடைக்கவில்லை. அந்த கடிதம் முழுவிவரம் இதோ!
“என்னை வாழ வைத்த தெய்வங்களான என் அன்புக்குரிய என் ரசிகர்களும், மக்களும்தான் எனக்குக் கடவுள். அவர்களிடம் எல்லா உண்மைகளையும் எப்போதுமே சொல்வது என்னுடைய இயல்பு.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் – அரசியல் மாற்றத்துக்காக மக்களிடையே எழுச்சியை உண்டாக்க இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் மற்றும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, அக்டோபர் 2-ம் தேதி மதுரையில் மாநாடு கூட்டி கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என்றிருந்தேன்.
இந்தக் கொரோனா பிரச்னையால் கடந்த பல மாதங்களாகவே யாரையும் சந்திக்க முடியவில்லை. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தவும் இயலவில்லை.
2011-ம் ஆண்டு எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்து வந்தேன். அது அனைவருக்கும் தெரியும். 2016-ம் ஆண்டு மே மாதத்தில் மறுபடியும் எனக்குச் சிறுநீரக பாதிப்பு தீவிரமாக ஏற்பட்டு அமெரிக்காவில் ராசெஸ்டர் நகரிலுள்ள மயோ கிளீனிக்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. இது ஒரு சிலருக்கே தெரியும்.
கொரோனா தொற்று எப்போது முடியும் எனத் தெரியாத நிலையில், எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் எனது அரசியல் பிரவேசத்தைப் பற்றி ஆலோசனை கேட்டேன்.
அதற்கு மருத்துவர்கள், “கொரோனாவுக்கு ஒரே தீர்வு தடுப்பூசிதான். அது எப்போது வரும் என்று தெரியாது. வந்தாலும், அந்தத் தடுப்பூசியை உங்களுக்குச் செலுத்தினால் உங்கள் உடல்நிலை அதை ஏற்றுக் கொள்ளுமா என்பது அந்த மருந்து வந்த பிறகுதான் தெரிய வரும்.
இப்போது உங்களுக்கு வயது எழுபது. உங்களுக்கு சீறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால் மற்றவர்களைவிட உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். அதனால் கொரோனா தொற்று உங்களை எளிதில் தாக்கக் கூடிய வாய்ப்பு மிக அதிகம். அது உங்கள் சிறுநீரகத்தை மட்டுமல்ல, உங்கள் உடல் நலத்தையும் நிச்சயம் கடுமையாக பாதிக்கும்.
ஆகையால், இந்த கொரோனா காலத்தில் நீங்கள் மக்களைச் சந்தித்து, அவர்களைத் தொடர்பு கொண்டு அரசியலில் ஈடுபடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்” என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள்.
எனக்கு என் உயிர் பற்றிய கவலை இல்லை. என்னை நம்பி வருவோரின் நலன் குறித்துத்தான் கவலை. நான் தொடங்குவதோ புதுக் கட்சி. மக்களை நேரில் சந்திக்காமல், மாநாடுகள் நடத்தாமல், பொதுக் கூட்டங்கள் கூட்டாமல் வெறும் சமூக வலைதளங்கள், ஊடகங்கள் மூலமாக மட்டும் பிரச்சாரம் செய்தால், நான் எதிர்பார்க்கும் அரசியல் எழுச்சியை மக்கள் மத்தியில் உருவாக்கி, அரசியல் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது.
மருத்துவர்களின் ஆலோசனையை மீறி கட்சி ஆரம்பித்து, இடையில் என் உடல்நலம் பாதிப்படைந்தால் அது பல சிக்கல்களை உருவாக்கும்.
இதை இப்போதே சொல்லக் காரணம், என்னை ஆதரிப்போரின் மத்தியில் நான் அரசியலுக்கு வருவேன் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிவரும் சூழலில், இந்த கொரோனா பிரச்னை தொடரும் நிலையில், கடைசி நேரத்தில் இந்தக் காரணங்களைக் காட்டி ஒருவேளை நான் அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால், அது அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும்.
நான் கட்சி ஆரம்பிப்பதாக இருந்தால் அதை எதிர்வரும் ஜனவரி மாதம் 15-ம் தேதிக்குள் ஆரம்பிக்க வேண்டும். அதற்கான முடிவை டிசம்பர் மாதத்திலேயே அறிவிக்க வேண்டும். இது தீர்க்கமாக யோசித்து, தீர ஆராய்ந்து எடுக்கப்பட வேண்டிய முடிவு.
எனவே, அப்போதைய சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, என் உடல்நலத்தில் அக்கறையுள்ள, என்னை வாழ வைத்த தெய்வங்களான என் அன்பிற்குரிய ரசிகர்களும், மக்களும்… என்னை என்ன முடிவு எடுக்கச் சொன்னாலும் அதனை நான் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.
வாழ்க தமிழ் மக்கள்!
வளர்க தமிழ்நாடு!!
ஜெய்ஹிந்த்!!!’
இப்படி எழுதப்பட்டிருக்கிறது அந்தக் கடிதம்.