நடிகர் சங்கத் தேர்தல் முடிவடைந்து புதிய நிர்வாகம் பொறுப்புக்கு வந்த பிறகு நடந்த பொதுக் குழுக் கூட்டத்தில் கூட அஜித் பங்கேற்கவில்லை. இப்போது நடைபெறவிருக்கும் நடிகர் சங்க புதிய கட்டிடத்துக்காக நட்சத்திரக் கிரிக்கெட் நிதி திரட்டல் நிகழ்ச்சியிலும் அஜீத் பங்கேற்க மாட்டார் என்கிறது அஜித் தரப்பிலான செய்திகள். இதைத் தொடர்ந்து சிம்புவும் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துவிட்டார்.மேலும் நடிகர் சங்கம் கிரிகெட் போட்டி நடத்தி வசூல் செய்வதை கண்டித்தும்,கிண்டலடித்தும் அஜித் ரசிகர் என்ற போர்வையில் அஜித் தரப்பு வாட்ஸ் அப்பில் கடும் விமர்சனம் செய்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இதற்கு பதிலடியாக ஒரு அதிரடி பதிலை தயார் செய்து வாட்டஸ் அப்பில் உலவ விட்டு ள்ளது விஷால் தரப்பு. அதில்,’ஒரு சில நடிகர்கள் தங்களது பண வசதியைக் காட்டவும், பொதுக் குழுவில் கலந்து கொள்ளாமலும், தனது ரசிகர்களைக் கொண்டு தனது திரைக் குடும்பத்தையே விட்டுக்கொடுத்து அவர்கள் சுய விளம்பரம் செய்கிறார்கள். கலைத் துறை சார்ந்த எந்த ஒரு விழாவையும் முதலில் புறக்கணித்து வருபவர்களும் அவர்களே. நட்சத்திர கிரிக்கெட்டால் மக்களின் பணம் சுரண்டப்படுகிறது, நடிகர் சங்கம் பிச்சை எடுக்கிறது என்று தனது ரசிகர்களைத் தூண்டிவிட்டு விளம்பரம் செய்வதால் என்ன பயன்? நடிகர் நடிகைகள் பிச்சைக்காரர்கள் அல்ல. அவர்கள் தங்களது நேரத்தை ஒதுக்கி நாடக நடிகர்கள் வாழ்வு முன்னேற அன்றைய தங்களது வருமானத்தை விட்டுவிட்டு நட்சத்திர கிரிக்கெட்டில் பங்கு கொள்கின்றனர். தனது ரசிகர்களுக்குக்கூட முக்கியத்துவம் தராத ஒரு சில நடிகர்களுக்கு, நாடக நடிகர்களின் முக்கியத்துவம் தெரிய வாய்ப்பு இல்லை. ஒரு சில நடிகர்களின் ரசிகர்கள் யார் எந்த நல்லது செய்தாலும் முதலில் அவர்களை கேலி செய்வதற்கு ஒதுக்கும் நேரத்தில் நலிந்த நாடக நடிகர்களின் வாழ்க்கை அறிய வேண்டும். தன்னால் செய்ய முடியாத நல்ல காரியங்களை நல்ல மனம் படைத்த சில நடிகர்கள் செய்யும் போது அவர்களை வாழ்த்த வேண்டாம். அவர்களை வருந்தச் செய்யாமல் இருந்தாலே போதும். பழங்காலத்தில் நாம் செய்யும் உதவி யாருக்கும் தெரியாதவாறு செய்யவேண்டும் என்றனர். ஆனால் இக்கால சூழ்நிலையில் நாம் செய்யும் உதவி அடுத்தவருக்கு தெரியவேண்டும், அப்போதுதான் அதை அறிந்து நான்கு பேர் மற்றவருக்கு உதவுவார்கள். இங்குள்ள அனைத்து நடிகர்களுக்கும் ரசிகர்கள் உண்டு என்பதை அந்த நடிகர்கள் அறியவேண்டும். அந்த ரசிகர்களுக்கு பகுத்தறிவு, வேலை, நல்ல மனம் உள்ளதால் அவர்கள் அவர் வழியில் செல்கின்றனர். அவர்களுக்கு அடுத்தவர்களைக் குறை கூறவோ, பழி சொல்லவோ அவசியம் இல்லை. சில நடிகர்கள் சொல்வதைப் போல், நடிகர் சங்கக் கட்டிடம் நடிகர்களின் சொந்த செலவில் கட்டப்படவேண்டும் மக்களைச் சுரண்டக் கூடாது என்கிறார்களே .. அவர்கள் நடித்த படம் பார்க்க ரசிகர்கள் பணம் கொடுத்து நுழைவுச் சீட்டு வாங்கிய பிறகுதானே திரையரங்கம் உள்ளே விடுகிறார்கள்? அந்நேரம் அந்த நடிகர்கள் என் ரசிகர்களிடம், மக்களிடம் காசு வாங்காதீர் என்று அறிக்கை விட வேண்டியது தானே? அல்லது தாங்கள் நடித்த படம் மூலம் மக்கள் காசு சுரண்டப்படக் கூடாது என்று நினைத்தால் இலவசமாக படம் நடித்து திரையிட வேண்டியது தானே? இந்திய கிரிகெட் அணி விளையாட்டைக் காண நுழைவுக் கட்டணம் பெற்று தான் செல்லவேண்டும். அதற்காக இந்திய அணி விளையாட்டில் மக்கள் பணம் சுரண்டப்படுகிறது என்று குற்றம் சாற்றுவர்களோ? தன்னிடம் பணம் இருக்கு என்பதற்காக வீட்டில் இருந்து தனது பண ஆளுமையை காட்டும் சில நடிகர்களால் பணம் இல்லாத வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்படும் நடிகர்களின் மனதை எவ்வாறு அறியமுடியும்? சினிமா என்பது ஒரு பொழுது போக்கு? அவர்கள் அவர்களது திரைக் குடும்ப தேவைகளை சரிசெய்ய அனைத்து நடிகர்களும் ஒன்றுகூடி நட்சத்திர கிரிக்கெட்டில் பங்கு கொள்கின்றனரே தவிர அவர்களது சொந்த செலவுக்கு அல்ல என்பதை அறியவேண்டும். விவாதம் செய்யும் நடிகர்கள் ஒரே ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளவேண்டும் முதலில் அவர்கள் அவர்களின் திரைக் குடும்பத்திற்கோ, ரசிகர்களுக்கோ நாம் என்ன செய்தோம் என்று யோசித்து பார்க்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.