“ஜகமே தந்திரம்” வெளியீட்டுக்காக தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், “ஜகமே தந்திரம்” படத்தின் இசைப்பணிகள் குறித்து சந்தோஷ் நாராயணன் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது…
“இப்படத்தின் இசைப்பணிகளுக்காக மிகப்பெரிய அளவில் நேரம் கிடைத்தது. உலக அளவில் பயணப்படும் படம் என்பதால் நிறைய மெனக்கெட்டேன். பல இடங்களில் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.
இந்த படத்தின் இசை நம் மக்களுக்கு அந்நியமாக இருக்ககூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். இந்த படம் ஒரு வகையில் பிரிட்டிஷ் படைப்பென்றே சொல்லலாம். அதிலும் பிரிட்டிஷ் பேண்ட் குழுவினர் மற்றும் இசை கலைஞர்கள், ஸ்காட்டிஷ் இசை கலைஞர்கள் என உலகம் முழுவதிலிருந்தும் பல திறமையாளர்களுடன் இணைந்து இப்படத்தில் பணிபுரிந்திருக்கிறேன்.
மதுரை நாட்டுப்புற இசையையும் இப்படத்தில் முயற்சித்திருக்கிறேன். “ஜகமே தந்திரம்” படப்பிடிப்பிலும், கலந்து கொண்டேன். அதனால் படத்தில் இசை காட்சிகளில் எப்படி பொருந்தும் எது பொருந்தாது என்கிற தெளிவு இருந்தது. இந்த அனுபவமே புதுமையாக இருந்தது. ஒரு கலைஞனாக, பல விதமான புதிய முயற்சிகளுக்கு இப்படத்தில் இடம் கிடைத்தது, மிகப்பெரும் மகிழ்ச்சி.
“ரகிட ரகிட” பாடல் முதல்முறையாக எனது ஸ்டூடியோவிற்கு வெளியே பதிவு செய்த பாடல். அந்த பாடலே ஒரு அனுபவத்தின் உணர்வின் வெளிப்பாடு தான். ரசிகர்கள் அந்த அனுபவத்தை உணர வேண்டும் என்று நினைத்தோம். படத்தின் மொத்த குழுவினருக்கும் எனது நன்றிகள்.
குறிப்பாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்ஜுக்கு நன்றி. இப்படத்தில் அவருடன் இணைந்து நூற்றுக்கணக்கான புதிய முயற்சிகளை செய்தேன். ஆனால் “ஜகமே தந்திரம்” படத்திற்கு, காட்சிக்கு தேவையான மண்ணின் இசையை, படத்தில் கொண்டுவந்துள்ளோம். ரசிகர்கள் படத்தை கொண்டாடுவார்கள் என நம்புகிறேன் என்றார்.