தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, தமிழ் நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம் ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டுக்கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. இதில் சென்னை செங்கற்பட்டு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் ‘தெறி’ திரைப்பட தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ்.தாணு ஆகியோர் இடையே உள்ள பிரச்சனை குறித்து பேசப்பட்டு சுமுகமான உடன்பாடு ஏற்பட்டது. இந்த கூட்டத்தில் ஆக்கபூர்வமான செயல்களை செயல்படுத்தவும், அரசிடம் இருந்து சலுகைகளை கேட்டு பெறவும் ஒரு உயர்மட்ட கமிட்டி அமைப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. மற்ற விவரம் வருமாறு:
1. சிறு பட தயாரிப்பாளர் நலன் காக்கும் வகையில் மாதத்தின் ஒரு வாரத்தில் சிறு படங்கள் மட்டுமே வெளியிடுவது என்றும், அந்த வாரத்தை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆலோசனை படி முடிவு செய்யப்படும்.
2.தமிழக அரசின் மானிய தொகை தயாரிப்பாளருக்கு உடனடியாக கிடைக்க, அமையப் போகும் அரசிடம் முறையிட்டு பெறுவது…
3.தயாரிப்பாளர்கள் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களிடம் கொடுத்திருக்கும் முன் பணம் சமந்தமான விஷயங்களை முறைப்படுத்துவது,
4.திரையரங்கு கட்டணத்தை முறைப்படுத்தி கணினிமயமாக்குவது…
5.திரையரங்குகளின் உரிமம் புதுப்பித்தலை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாக மாற்றித்தர ஆவண செய்வது சம்பந்தமாக…
6.தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகிய மூன்று தரப்பினருக்கும் ஏற்படும் அபரிமிதமான நஷ்டத்தை ஈடுகட்டுவது சம்பந்தமாக…
என முக்கியமான 6 விஷங்கள் குறித்து மே மாதம் நடக்கும் முதல் கூட்டத்தில் தீர்வு காண்பது என்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் வெளியாகவுள்ள சூர்யாவின் ‘24’, ரஜினியின் ‘கபாலி’ உட்பட அனைத்து தமிழ் திரைப்படங்களும் எல்லா ஏரியாக்களிலும் வெளியாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது