தமிழக முதல்வரின் குறைதீர்ப்பு துறைகள் அனைத்தும் (உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர், முதல்-அமைச்சர் உதவி மையம், குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு ஒருங்கிணைப்பு) ஒருங்கிணைக்கப்பட்டு, ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முதல்வர் முகவரி துறையின் சிறப்பு அலுவலராக ‘ஷில்பா பிரபாகர் சதீஷ்’ நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தலைமைச் செயலாளா் இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது,
“முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, முதல்-அமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலாண்மை அமைப்பு (ஐஐபிஜிசிஎம்எஸ்), உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கப்படுகிறது.
முதல்-அமைச்சர் முகவரி துறையின் மனுக்களுக்குத் தீா்வு காண முதல்வரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலாண்மை அமைப்பின் உதவி எண் மாநிலம் முழுவதும் ஒற்றை இணையதள முகப்பாகப் பயன்படுத்தப்படும்.
இது முதல்வரின் முகவரி துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும். உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறையின் சிறப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் சதிஷ், முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்படுகிறாா்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.