நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரன் துஷ்யந்த் ராம்குமாரின் ஈஷான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய படம் ‘மீன் குழம்பும் மண்பானையும்’ இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தில், நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் கதாநாயகனாகவும் , ஆஸ்னா ஜாவேரிகதாநாயகியாகவும் நடிக்க,இவர்களுடன்,இளையதிலகம் பிரபு, பூஜா குமார், சந்தானபாரதி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படம் பிரபு நடித்த 200வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.இதில் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள அமுதேஷ்வர் கூறியதாவது,‘‘காரைக்குடியை சேர்ந்த நிறைய பேர் மலேசியாவில் ஹோட்டல்கள் நடத்துகிறார்கள். அப்படி மலேசியாவில் ஹோட்டல் நடத்தி வரும் ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் பிரச்னைகள் பற்றிய கதைதான் ‘மீன் குழம்பும் மண் பானையும்’. படத்தின் பெரும் பகுதி கதை மலேசியாவிலேயே நடப்பது மாதிரி! அதனால் மலேசியாவின் முக்கிய இடங்களில் எல்லாம் படப்பிடிப்பு நடத்தினோம்.. படத்திற்கு ‘மீன் குழம்பும் மண் பானையும்’ என்று டைட்டில் வைத்ததற்கான காரணம், நம் மண்ணோடு ஒன்றிய விஷயம் மீன் குழம்பு! அதைப் போல மண் பானையும்! இதை வைத்து மண் பானையில் வைத்த மீன் குழம்பு என்று யாரும் அர்த்தம் கொள்ள வேண்டாம். படத்தை பொறுத்தவரை மீன் குழம்பு வேறு, மண் பானை வேறு! அது என்ன என்பது படத்தை பார்க்கும்போது தெரிந்து விடும்’’ என்றார்.லட்சுமன்குமார் ஒளிப்பதிவில்,டி.இமான் இசையமைத்துள்ளார்.