நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது..இவருக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது வழங்கப்படுவதாக அந்நாட்டின் கலாச்சாரத்துறை அறிவித்துள்ளது. சிறந்த நடிப்பாற்றலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.இதற்கு முன்பு கடந்த 1997ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜிகணேசன் இந்த விருதை பிரான்ஸ் அரசாங்கத்திடம் இருந்து பெற்றார். இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷண் உள்ளிட்ட விருதுகளையும் கமல்ஹாசன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தனக்கு கிடைத்த செவாலியே விருது குறித்து கமல்ஹாசன் கூறியதாவது,
பிரஞ்சு அரசு கலை இலக்கியத்திற்கான செவாலியே விருதை எனக்கு அளிக்க மனமுவந்து முன்வந்துள்ளது..பெருமிதத்துடன் நன்றியுடன் பணிவுற்று அவ்விருதினை நான் ஏற்கிறேன்.அவ்விருதின்பெருமையை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்திய அய்யா சிவாஜி கணேசன் அவர்களையும், வடநாட்டு பாமரரும் அறியச்செய்த காலம் சென்ற சத்யஜித்ரேவையும் என் கரம் கூப்பி வணங்குகிறேன்.இச் செய்தியை எனக்கு தெரிவித்த இந்தியாவில் உள்ள பிரஞ்சுதூதர் மாண்புமிகு அலெக்ஸாண்டர் ஸீக்லர் அவர்களுக்கும் என் நன்றி!. இனி நான் செய்ய வேண்டிய கலைஇலக்கிய பணிக்கு ஊக்கியாகவே இவ் விருதினை நான் உணர்கிறேன்.கலைக்கடற்கரையில் கைமன் அளவு அள்ளிவிட்ட பெருமை எவ்வளவு சிறுபிள்ளைத் தனமானது என்பதை நான் உணர்கிறேன்.வயதில்லாது என்றும் ஆர்பரிக்கும் கலைக்கடல் அலைகள் இத்தகைய தருணங்களில் கரை மோதி. என்போன்றோர் முகத்தில் தெளித்து பெருவிஷ மயக்கம்கலைத்து,உதடும் நனைத்து உப்பிட்டவரின் நினைவை உணரச் செய்கிறது இது வரையிலான என் கலைப்பயணம் தனிமனிதப்பயணம் இல்லை என்பதை உணர்கிறேன்.கை தாங்கி எழுத்தும்,கலையும் அறிவித்த பெரும் கூட்டத்தினுடனே நான் ஏற்ற யாத்திரை இது என்பதையும் நான் உணருகிறேன். அப் பெரும் கூட்டத்தில் பெரும் பான்மை தமிழகத்து ரசிகர்கள் நாலு வயது முதல் என்கை பிடித்து படியேற்றி பீடத்தில் அமர்த்திப் பார்க்கும் தாய்மையுள்ளம் கொண்ட அவர்களுக்கும் இவ்விருது அர்ப்பணம்! எனது பெற்றோர் இருந்து பார்க்கவியலாத குறையில் என் குடும்பத்தில் எஞ்சிய பெரியோரும்,இளையோரும் என் சிறு வெற்றிக்கும் ஆர்பரிக்கும் என் ரசிகர் கூட்டமும் போக்கி விடுகிறது நன்றியுடன் என்றும் உங்கள் கமல்ஹாசன்!