சென்னையில் இன்று காலை நடைபெற்ற சிஐஐ தக்ஷின் விழாவில் நடிகர் கார்த்தி கலந்துக் கொண்டு பேசியதாவது,”தமிழகம் வரலாறு ரீதியாகவும் பாரம்பரியமாகவும் இலக்கியம், கவிதை, இசை, நடனம் மற்றும் நாடகம் போன்ற கலை வடிவங்களின் மையமாக இருந்து வருகிறது. சென்னையின் கரைகளை சினிமா எப்போது தொட்டதோ, அப்போதிலிருந்தே மேடை நாடகத்தின் உச்ச நட்சத்திரங்களான பி.யு.சின்னப்பா, எம்.கே. தியாகராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம், எஸ்.ஜி.கிட்டப்பா மற்றும் அவரது மனைவி கே.பி.சுந்தராம்பாள் உள்ளிட்டோரை உடனடியாக தன்பால் ஈர்த்துக் கொண்டது.
தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் அதன் கதைகள் பெரும்பாலும் நமது புராணம் மற்றும் கற்பனைக் கதைகளை ஒட்டியே இருந்தது. முதல் பல வருடங்களுக்கு சங்கரதாஸ் சுவாமிகளின் 68 மேடை நாடகங்களிலிருந்தே, தமிழில் உருவான சினிமாக்களின் கதைகள் இருந்தன. ஆரம்ப நாட்களில் மொழி எல்லைகளைத் தாண்டி பேசப்பட்ட முதல் படங்களில் ஒன்று, தமிழ் மற்றும் இந்தியில் படமாக்கப்பட்ட எஸ்.எஸ்.வாசனின் பிரம்மாண்ட படைப்பான சந்திரலேகா. வைஜெயந்தி மாலா என்ற நடிகை நட்சத்திரமாக ஆனார். ஏவிஎம் நிறுவனம் அவரை அறிமுகப்படுத்தியது. அப்போதே எல்லைகளைக் கடந்து புது ரசிகர்களை நோக்கி நட்சத்திரங்கள் சென்று கொண்டிருந்தனர்.
இருப்பினும் 50 மற்றும் 60 களில் திரைப்படங்கள் சமூகம் மற்றும் குடும்பச் சூழலை ஒட்டிய கதைகளைச் சொல்ல ஆரம்பித்த போது, உண்மையாகவே எல்லைத் தாண்டிய தாக்கத்தைப் பார்க்க முடிந்தது. அதாவது மற்ற மொழிகளில் வெற்றி பெற்ற படங்கள் ரீமேக் செய்யப்பட்டன. இளங்கோவன், அறிஞர் அண்ணா, கலைஞர் போன்றோரின் சக்திவாய்ந்த வசனங்களும், அதற்கேற்ப நடிகர்களின் நடிப்பும் அவர்களின் செல்வாக்கை அதிகரித்து, அதன் மூலம் அவர்கள் நம் உயர்ந்த மாநிலத்தின் முதல்வராகவும் வழி வகுத்தது. சினிமாவின் வலிமை இதுவே.
எம்.ஜி.ஆர் நடித்த மலைக்கள்ளன் 1954-ல் இந்தியில் ஆசாத் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியில் வெளியான பாபி படம் 1956ல் தமிழில் குலதெய்வம் என்ற பெயரில் எடுக்கப்பட்டது. வஞ்சி கோட்டை வாலிபன் 1958 ஆம் ஆண்டு ஹிந்தியில் ராஜ் திலக் என்ற பெயரில் வெளிவந்தது. இப்படி இந்தப் பட்டியல் இன்னும் நீளும்… இன்று வரை தமிழ் படைப்புகள் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு, மொழி மாற்றம் செய்யப்பட்டு, அதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தையும், அதன் அழகியலையும் மற்றவர்கள் புரிந்து கொள்வதற்கு ஒரு தளத்தை அமைத்துக் கொடுக்கிறது.
தமிழ் சினிமா எப்போதுமே நம் சமூகத்தின் பிரதிபலிப்பாக இருந்து வருகிறது. கே பாலச்சந்தர், ருத்ரய்யா மற்றும் பாலு மகேந்திரா போன்ற இயக்குநர்கள் நம் சமூகத்தில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்த வார்ப்புருக்களை அமைத்துள்ளனர். வெள்ளித்திரையில் சுதந்திரமான மற்றும் துணிச்சலான இளம் பெண்ணை அவர்கள் சித்தரித்த விதம் இன்றளவும் பொருத்தமாக உள்ளது.
கமல்ஹாசன், மணிரத்னம், பிசி ஸ்ரீராம், ஷங்கர் மற்றும் ஏஆர் ரஹ்மான் போன்ற படைப்பாளிகளின் வருகை புதிய யுக சினிமாவின் உதயத்தை அறிவித்தது. வலுவான, தைரியமான கரு, காட்சிகள் மூலம் கதை சொல்லும் விதம், மேம்பட்ட ஒலி வடிவமைப்பு என திரைப்பட உருவாக்கத்தை புதிய பாதைக்கு இட்டுச் சென்று பரந்துபட்ட பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் மாற்றினர். தங்களின் அசத்தியமான, கவர்ச்சிகரமான இருப்பின் மூலம் எங்கள் சூப்பர் ஸ்டார்கள் திரைப்பட வணிகத்தின் எல்லைகளை விரிவாக்கினர்.
சிறந்த திறமையாளர்களின் நீண்ட பட்டியலைக் கொண்டுள்ளதில் தமிழ் திரையுலகம் பெருமிதம் கொள்ளும் அதே வேளையில், உலகம் முழுவதும் உள்ள சிறந்த திறமையாளர்களைப் பயன்படுத்தவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். புடாபெஸ்ட் மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளில் உள்ள சிம்பொனி இசைக் கலைஞர்கள், எங்கள் சொந்த இசை வித்தகர்களான இளையராஜ, ஏஆர் ரஹ்மான் உள்ளிட்ட இசையமைப்பாளர்களால் எழுதப்பட்ட இசையை இசைத்துள்ளனர். வெளிநாட்டு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் எண்ணற்றோர் எங்கள் தமிழ் படங்களில் பங்கெடுப்பதைப் இப்போதே பார்க்க முடிகிறது.
தமிழ் சினிமாவில் கதை சொல்லும் முறை பரிணாம வளர்ச்சியடைந்து, நாள் ஆக ஆக இன்னும் பண்பட்டே வருகிறது. பெருமைமிகு சர்வதேச திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைப்படங்கள் தொடர்ந்து காட்சிப்படுத்தப்பட்டு, முன்னெப்போதையும் விட அதிகமான விருதுகளையும் பாராட்டுகளையும் வென்றுள்ளன. ஆஸ்கார் உள்ளிட்ட மற்ற சர்வதேச விருது விழாக்களில் தமிழ் திரைப்படங்கள் மற்றும் பிற தென்னிந்திய மொழிகளின் திரைப்படங்கள் பெற்றுள்ள விருதுகள், எங்கள் திறமைக்கான, உலக அரங்கில் நாம் எவ்வளவு முன்னேறி இருக்கிறோம் என்பதற்கான சான்றுகளாகும். எலிஃபண்ட் விஸ்பரர்ஸ், நாட்டு நாட்டு ஆகியவை குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம். எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் படத்தை நான் என் குழந்தைகளுடன் பார்த்தேன். ஊட்டியிலிருந்து ஒரு கதை உலகம் முழுவதும் சென்றுள்ளது என்பதை நினைத்து ஆனந்தப்பட்டேன். கார்த்திகிக்கு நன்றி. பிரேம் ரக்ஷித் சார், எங்கள் கால்களை உடைத்தது பத்தாது என்று வெளிநாட்டவரின் காலையும் உடைக்கும் அளவுக்கு அனைவரையும் அந்த நாட்டு நாட்டு நடனத்தை ஆட வைத்துவிட்டார். அதற்கும் நன்றி.
தமிழ் சினிமா எப்போதுமே மாற்றத்தின் முன்னோடியாக இருந்துள்ளது. அப்படி நம் துறை, தொடர்ந்து நம்பிக்கையுடனும் நேர்மறையுடனும் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி முன்னேற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எங்கள் அனைவரையும் ஒரே தளத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் சிஐஐக்கு நன்றி. இவ்வாறு அவர் பேசினார்