நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில்,
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் ஆண்டனி நடிக்க, சுசீந்திரன் இயக்கத்தில், 1980 களின் காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகி வரும் திரைப்படம் “வள்ளி மயில்”. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.
சமீபத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 வெற்றிக்குப் பிறகு இன்று, வள்ளி மயில் படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி கலந்துகொண்டுள்ளார். படக்குழுவினர் அவரை உற்சாகமாக வரவேற்று பிச்சைக்காரன் 2 வெற்றியைக் கொண்டாடியுள்ளனர்.
1980களில், நாடக கலையின் பின்னணியில் நடக்கும் ஒரு புதுமையான டிராமா திரில்லராக வள்ளி மயில் திரைப்படம் உருவாகிறது. 1980 கால கட்ட கதை என்பதால் முன்னதாக திண்டுக்கல் மாநகரில் 1980 காலகட்ட பின்னணியைக் கண் முன் கொண்டு வரும் வகையில், 1 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு, இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது.
தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு 24 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ளது. இத்துடன் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடையவுள்ளது.
இப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, பரியா அப்துல்லா நாயகியாக நடிக்கிறார். பாரதிராஜா, சத்யராஜ், புஷ்பா படப்புகழ் சுனில், GP முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு – வாஞ்சிநாதன் முருகேசன்,
இப் படத்தின் படப்பிடிப்பு முடியவுள்ள நிலையில், டீசர் மற்றும் இசை வெளியீடு குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்கிறது படத்தரப்பு..