
பாணியின் தன்னாட்சி குடில் படைப்பு மற்றும் பார்ச்சூன் பிக்சர்ஸ் சார்பில் செல்வராம் மற்றும் வெங்கடேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஞானச்செருக்கு’. இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கி ஓவியர் வீரசந்தானம் கதையின் நாயகனாக நடித்துள்ள இந்தப்படம் ‘விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், வ.கௌதமன், பன்னீர்செல்வம், சுப்பிரமணிய சிவா, அஜயன்பாலா, நடிகைகள் மதுமிதா, வசுந்தரா, கோமல் சர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்தபடம் குறித்து தொல்.திருமாவளவன் பேசும்போது, “இந்த படத்தை நான் பார்த்துவிட்டேன். ஞானச்செருக்கு என்கிற பெயரை இன்னும் சாதாரண தமிழில் சொன்னால் அறிவுத்திமிர் என்று சொல்லலாம். தந்தை-மகன், ஆசிரியர்-மாணவன், தலைவர்-தொண்டன் என ஒவ்வொரு துறையிலும் தலைமுறை இடைவெளி இருப்பது போல சினிமாவிலும் இருக்கிறது. இங்கே வாழ்த்த வந்திருக்கும் மூத்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கும் இந்த படத்தை இயக்கியிருக்கும் தரணி ராஜேந்திரனுக்கும் இருக்கும் இடைவெளி கூட தலைமுறை இடைவெளிதான். இதைத்தான் இந்தப்படத்தில் கருப்பொருளாக பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர் தரணி ராஜேந்திரன்.
காதல், டூயட், குத்துப்பாட்டு, சண்டைக்காட்சி என எந்தவித வணிக நோக்கமும் இல்லாமல் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. கதையின் கருப்பொருளே ஓவியர் வீர சந்தானம் தான். ஓவியர் வீர சந்தானத்துடன் போராட்டக் களங்களில் நான் கைகோர்த்து நின்றவன்.. என்னுடைய புத்தகங்களுக்கு அவரது ஓவியங்களை வழங்கி அலங்கரித்திருக்கிறார். மிகச்சிறந்த ஈழ உணர்வாளர். தரணி ராஜேந்திரன் யாரும் உணர முடியாததை உணர்ந்திருக்கிறார். யாரும் தொடமுடியாத ஒரு விஷயத்தை தொட்டிருக்கிறார். யாரும் விவரிக்க முடியாத ஒரு விஷயத்தை விவரித்திருக்கிறார். இதுவே அவருக்கு உள்ள ஞான வலிமையை காட்டுகிறது. 

இசைஞானி இளையராஜாவின் இசையை 25 ஆண்டுகளுக்கு மேலாக உலகமே கொண்டாடிக்கொண்டிருந்தபோது ஏ.ஆர் ரகுமான் என்பவர் வந்தார் உலகம் ரகுமானை சுற்றிக் கொண்டது ஏன்? இளையராஜாவால் இந்த தலைமுறைக்கு ஏற்ப இசையை வழங்க முடியாதா..? அது அவருக்கு தெரியாதா என்கிற கேள்வி எழும்..
ஆனால் அதற்கு விடை சொல்ல முடியாது. அதேபோலத்தான் இங்கே இருக்கிறார் இயக்குநர் எஸ்பி.முத்துராமன். அவரால் இதுபோன்ற படத்தை இயக்க முடியாதா என்றால் அந்த கேள்விக்கு விடை தெரியாது. இந்த படத்தின் நாயகனும் இதுபோன்ற ஒரு தலைமுறை இடைவெளியில் சிக்கிக்கொண்டவர் தான். அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதுதான் கதை.
இயக்குநர் சுப்பிரமணிய சிவா பேசும்போது, “நல்லவர்களை கொண்டாட மறுக்கும் இந்த உலகம் அதிகாரத்தில் உயர்ந்தவர்களை, பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களை கொண்டாடுகிறது. ஆனால் இந்தப்படம் நமக்காக போராடிய ஒருவரை கொண்டாடும் படமாக உருவாகியிருக்கிறது. முதல் பெஞ்சில் இருக்கும் மாணவர்களையே கொண்டாடிக்கொண்டிருந்தால் கடைசியில் இருப்பவர்களை கவனிப்பது யார்.? அதனால் வீர சந்தானம் போன்ற மனிதர்களைப் பற்றி மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றால் இதுபோன்ற படங்களை அரசாங்கமே தயாரிக்கவேண்டும். அதுதான் சிறந்தது” என தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கையையும் வைத்தார். 

நடிகை ஜாங்கிரி மதுமிதா பேசும்போது, “வீர சந்தானம் ஐயாவை நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது. நெடுநல்வாடை, சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட சில படங்கள் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெரிய அளவில் கவனம் ஈர்த்தன. ஆனால் அது போன்ற நல்ல படங்களை மக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்க முடியவில்லை. இதனால் அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் அடுத்து மிகப் பெரிய அளவில் படம் எடுக்கும் அளவிற்கு லாபம் சம்பாதிக்க முடியவில்லை. தமிழக அரசும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் இதற்கு ஏதாவது செய்யவேண்டும்” என கோரிக்கை வைத்தார்
இயக்குனர் வ.கௌதமன் பேசும்போது, “ஒரு கலைஞன் அவன் உயிரோடு இல்லாத நிலையில் அவருக்காக நடத்தப்படும் இதுபோன்ற ஒரு பெரும் கூட்டம் தான் வீர சந்தானம் போன்ற ஒரு கலைஞனுக்கு நாம் செய்கிற மரியாதையாக இருக்கும். வீர சந்தானம் எல்லார் மீதும் பற்று வைப்பார். எல்லார் மீதும் கோபம் கொள்வார். அவரைப் பார்த்து பயப்படாத அரசியல்வாதிகள் தமிழ்நாட்டில் உண்டா என்றால் நிச்சயமாக இல்லை. அந்த அளவுக்கு அவர் மீது மரியாதை கொண்ட அரசியல்வாதிகள் நிறைய இருக்கின்றனர். இளம் கலைஞர்களை அவர் போல பாராட்டுவதற்கு ஆளே இல்லை. நான் இயக்கிய சந்தனக்காடு தொடரை மேதகு பிரபாகரன் விரும்பி பார்க்கிறார் என்கிற தகவலையும் வீர சந்தானம் தான் எனக்கு சொன்னார். வீர சந்தானம் நடித்த இந்த படத்திற்கு ஞானச்செருக்கு என தலைப்பு வைத்தது மிகப்பொருத்தமான ஒன்று. “என்றார்.
விழாவின் இறுதியில் முத்தாய்ப்பாக பேசிய மூத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பேசும்போது, “ஞானச்செருக்கு என்கிற இந்த படம் படைப்பாளர்களின் செருக்கு என்றுதான் சொல்வேன். இந்த செருக்கு எல்லாம் எங்களுக்கு இருந்தது இல்லை. ஆனால் இந்த பையன்களுக்கு இருக்கிறது. இதை பாராட்டத்தான் இந்த விழாவிற்கு வந்து இருக்கிறேன்.
இங்கு எல்லோரும் பேசும்போது தலைமுறை இடைவெளி பற்றி சொன்னார்கள். எனக்கு இப்போது பிறந்த தேதிப்படி 85 வயதாகிறது. உடல் ஆரோக்கியத்தின் படி எனக்கு வயது 55. என் மனதின் படி வயது 35. இந்த இளைய தலைமுறை படைப்பாளிகளை பார்க்கும்போது வந்த சந்தோசத்தில் என் வயது 18 ஆகிவிட்டது. இந்தப் படத்தைப் பார்த்தபிறகு, இதில் நடித்துள்ள வீர சந்தானத்தை பார்த்த பிறகு மீண்டும் ஒரு முறை வரவேண்டும் என்கிற எண்ணம் எனக்கு ஏற்பட்டுள்ளது. வயதாகிவிட்டது என்று சுருண்டு படுத்து விடாதே ! மீண்டும் எழுந்து செயல்படு என தூண்டும் விதமாக இந்த படத்தின் கருத்து அமைந்திருக்கிறது. இவர்கள் இன்று செய்யும கிராபிக்ஸ் வேலைகளை எல்லாம் நான் அன்றே செய்துவிட்டேன். அப்படியென்றால் இப்போது கிராபிக்ஸை வைத்துக்கொண்டு நான் எந்த அளவிற்கு வேலை செய்வேன்..? ஏதோ போனால் போகிறது என விட்டு வைத்திருக்கிறோம். ஆனால் இந்த படம் மீண்டும் என்னை உற்சாகமாக வேலை செய்யும் இலட்சியத்திற்கு தூண்டியுள்ளது” என்று கூறினார்












