இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், நடிகர் யஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துச் சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘டாக்ஸிக்’ (Toxic). முந்தைய பிளாக்பஸ்டர் வெற்றியைக் குறிவைத்து, அதீத சண்டைக் காட்சிகள் மற்றும் சர்வதேசத் தரத்திலான காட்சி அமைப்புகள் மூலம் ரசிகர்களைத் திருப்திப்படுத்த முயன்றுள்ள இத்திரைப்படம் தற்பொழுது பலத்த விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இத்திரைப்படம் 1947 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் போர்ச்சுகீசியர்களின் இறுதிக்கட்ட ஆட்சியைப் பின்னணியாகக் கொண்டு, கோவா மாநிலத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாஃபியாக்களின் மோதலுடன் தொடங்குகிறது. முரட்டு இளைஞனான யஷ் மற்றும் அவரது அக்கா நயன்தாரா இருவரும் இணைந்து எதிரணி கும்பல்களை வேட்டையாடுகிறார்கள். தம்பி முழு நகரத்தையும் ஆள வேண்டும் என்ற லட்சியத்துடன் பயணிக்கும் நயன்தாரா, ஒரு மிகப்பெரிய டானுடன் மோதும் சந்தர்ப்பத்தில் கொல்லப்படுகிறார்.அக்காவின் மரணத்திற்குப் பின் கோவாவை விட்டு வெளியேறும் யஷ், சீனப் பகுதியில் தனது சர்வதேச மாஃபியா நெட்வொர்க்கை விரிவுபடுத்துகிறார். மீண்டும் கோவா திரும்பும் யஷின் வருகையை அறிந்து முதல் மனைவி கியாரா அத்வானி தற்கொலை செய்துகொள்கிறார். தனது 10 வயது மகனைக் கொலை செய்ய முயன்று தோற்று, அவனைக் கோவாவை விட்டு விரட்டுகிறார் யஷ். பின்னர் ருக்மிணி வசந்தைத் திருமணம் செய்து வாழும் யஷின் மகனை, மூத்த மகன் கொல்லத்துடிக்கிறான். அதிலிருந்து ருக்மிணி வசந்தையும் இளைய மகனையும் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதே இப்படத்தின் எஞ்சிய கதையாகும்.
இப்படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்களும், பல்வேறு கிளைக்கதைகளும் (Sub-plots) ஒரே நேரத்தில் கையாளப்பட்டதே படத்தின் பிரதான பலவீனமாக மாறியுள்ளது. இதன் காரணமாக, காட்சிகளை நேர்த்தியாக வரிசைப்படுத்த முடியாமல் படத்தொகுப்பாளர் உஜ்வல் குல்கர்னி பெரிதும் தடுமாறியுள்ளார். இந்தத் தெளிவற்ற காட்சி அமைப்பால் தியேட்டரில் இருக்கும் பார்வையாளர்களும் பெரும் குழப்பத்திற்கு ஆளாகிறார்கள். திரையில் நகரும் சம்பவங்கள் தந்தையின் கோணத்திலா அல்லது மகனின் பார்வையா என்ற அடிப்படைப் புரிதல் கூட இல்லாமல் ரசிகர்கள் அவதிப்படுகிறார்கள்.இடைவேளை வரை கதையின் அசல் வடிவம் என்னவென்றே புரியாத ஒரு மந்தமான சூழல் நிலவுகிறது. இரண்டாம் பாதியில் அசல் கதைக்களம் ஓரளவிற்கு வெளிப்பட்டாலும், அதற்குள் திரைக்கதை தனது சுவாரசியத்தை முழுமையாக இழந்துவிடுகிறது. கீது மோகன்தாஸ் எழுதிய இக்கதைக்கு, யஷ் இணைந்து திரைக்கதை அமைத்திருந்தாலும், அதில் உள்ள பல கிளைக்கதைகளைத் தெளிவாக விவரிக்கத் தவறியுள்ளனர். கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வெறும் வெற்றுப் பிரம்மாண்டத்திற்கும், ஆக்ஷன் காட்சிகளுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தது இவர்களது திரைக்கதையின் மிகப்பெரிய பலவீனமாகும்.

படம் முழுவதிலும் நாயகன் யஷ் எதிரிகளை அதிரடியாகத் தாக்குவதும், ஆயுதங்களால் சுட்டு வீழ்த்துவதுமாகவே வலம் வருகிறார். இறுதிப் பகுதிக்கு முன்பாக யஷ் நடிக்க முயன்றிருந்தாலும், அதீத சண்டைக் காட்சிகளின் ஆதிக்கத்தால் அவரது நடிப்புப் பங்களிப்பு வீணாகிவிடுகிறது. யஷ் விதவிதமான ஆடைகளுடன் மது அருந்துவதும், பெண்களுடன் உல்லாசமாக இருப்பதுமான வன்முறை வாழ்க்கை முறையே படம் முழுவதும் பிரதானமாகத் தெரிகிறது.
இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், தாரா சுதாரியா, ஹுமா குரேஷி எனப் பான்-இந்திய அளவிலான மெகா நட்சத்திரப் பட்டாளங்கள் இருந்தும், அவர்களின் அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்தத் திரைக்கதையில் இடமில்லாமல் போயுள்ளது. கதாபாத்திரங்கள் உணர்வுகளைப் பிரதிபலிப்பதற்குப் பதிலாக, ஆபாசக்காட்சிகளையும் ஆடம்பரமான உடைகளையும், ஒப்பனையையும் மட்டுமே காட்டும் காட்சிப் பொருட்களாகச் சுருக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தொடக்கத்தில் சில அதிரடியான காட்சிகளுடன் மிரட்டலாகத் தோன்றும் நயன்தாரா, அடுத்தடுத்த காட்சிகளில் எவ்வித முக்கியத்துவமும் இன்றி அமைதியான ஒரு காட்சிப் பொருளாக மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்.
ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி, கிராபிக்ஸ் (VFX) காட்சிகளைச் சரியான முறையில் ஒரிஜினல் காட்சிகளுடன் இணைத்துப் படத்தைப் பிரம்மாண்டமாகக் காட்டியுள்ளார். குறிப்பாக 1947 – 1970 காலகட்டங்களுக்கான உடைகள் மற்றும் களத்தின் வண்ணங்கள் பிரமிக்க வைக்கும் விதத்தில் அமைந்துள்ளன.
ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா, தனிஷ்க் பாக்சி ஆகியோரது இசையில் பாடல்கள் பெரிதாகக் கவரவில்லை என்றாலும், பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளுக்கு ஓரளவிற்குக் கைகொடுத்திருக்கிறது. ஆனால், படம் முழுவதும் வன்முறை காட்சிகள் நிரம்பியிருப்பதால், பின்னணி இசை ஆங்காங்கே அதீத சத்தத்துடன் இருக்கிறது.
இயக்குநர் கீது மோகன்தாஸ், அசல் கதையை விட அதனை எப்படியாவது ஒரு ஹாலிவுட் பாணியில் காட்சிப்படுத்த வேண்டும் என்ற அதீத மோகத்தில், பல தேவையற்ற காட்சிகளைத் திணித்துப் பார்வையாளர்களைச் சோதித்துள்ளார். உணர்வற்ற எத்தகைய பிரம்மாண்டத்தையும் ரசிகர்கள் நிராகரிப்பார்கள் என்பதை இத்திரைப்படம் மீண்டும் நிரூபித்துள்ளது.












