
“திராவிட கட்சிகளின் 50 ஆண்டு கால ஆட்சியை தூக்கி எறிய இதுவே நல்ல நேரம். அவர்கள் வழி வழியாக வந்து கொண்டிருக்கிற பாரம்பரியம் உள்ளவர்கள். பணம் படைத்தவர்கள் மிகப்பெரிய அளவில் தொண்டர்கள் இருக்கிறார்கள். இளைஞர்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய மக்கள் எழுச்சி ஏற்பட்டால்தான் கட்சியை தொடங்க முடியும். திராவிட ஆட்சியை இப்போது அகற்றாவிட்டால் எப்போதுமே முடியாது. இட் இஸ் நவ் ஆர் நெவெர் ஊஸ்ட் தெம்” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
அவசரத்திலோ .ஆவேசத்திலோ பிறந்த பேச்சல்ல . ஆழ்ந்து சிந்தித்து சொன்னவை.
ரஜினிகாந்த் குறிப்பிட்ட 50 ஆண்டு கால திராவிட ஆட்சியில் பேரறிஞர் அண்ணா ,கலைஞர் கருணாநிதி ,மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.,புரட்சித்தலைவி ஜெயலலிதா ,ஆகிய தலைவர்களுடன் தற்போதைய சி.எம். எடப்பாடி பழனிசாமியும் அடங்குவார்கள். 1967 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ச்சியாக தமிழகத்தை ஆண்டு கொண்டிருப்பது திராவிட கட்சிகளும் அதனுடைய தலைவர்களும்தான்..இவர்களது ஆட்சியில்தான் லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடியது என்கிற குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் சொல்லிவருகின்றன. அண்ணாவின் ஆட்சி காலம் மட்டும் தப்பியது.! ( “எம்.ஜி.ஆர் ஆட்சியைப் போல தன்னாலும் தரமுடியும்” என்று ரஜினிகாந்த் பேசியதும் நினைவில் இருக்கிறது.)
இந்த கட்சிகளின் ஆட்சியை அகற்றுவதற்கு தேசிய கட்சிகள் முயன்று பார்த்தும் முடியாமல் திராவிட கட்சிகளின் நிழலிலேயே ஒதுங்க வேண்டிய நிலைதான் ஏற்பட்டது.
கலைஞர் கருணாநிதி , புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகிய இரண்டு வலுவான தலைமைகளை திராவிட இயக்கங்கள் இழந்து அவர்கள் இல்லாமல் சந்திக்கப்போகிற தேர்தல்தான் 2021 -ல் நடக்கவிருக்கிற தேர்தல். 
இரண்டு பெரிய தூண்கள் இல்லாத இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு திராவிட சாம்ராஜ்யத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தேயாக வேண்டும் என்கிற முனைப்புடன்தான் சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலில் இறங்கவிருக்கிறார்.இது சமயம் தவறினால் மறு வாய்ப்பு கிடைப்பது அரிது என்று அவர் நினைத்திருக்கலாம்.
அவரது புதிய கட்சியைப்பற்றிய அறிவிப்பினை நவம்பரில் வெளியிடுவார் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. மிகவும் ரகசியமாக செய்ய வேண்டிய வேலைகளை அவர்களது ஆலோசகர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
“எப்போது தலைவர் கட்சியை ஆரம்பிப்பார் “என்கிற கட்டுக்கடங்காத ஆசையுடன் அவரது ரசிகர்கள் போஸ்டர்களை முக்கிய நகரமெங்கும் ஒட்டத்தொடங்கினார்கள் .அளவுக்கு மீறிய ஆர்வம் எல்லை கடந்து விட்டதால் ரஜினி மக்கள் மன்றத்தலைமை குறுக்கிட்டு தடுத்து நிறுத்தி இருக்கிறது.இதற்கு ஒரு காரணமும் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.
மதுரை சுவரொட்டிகள் தான் பிரச்னைக்கு காரணம் என்கிறார்கள். எந்த திராவிட இயக்க சித்தாந்தத்தை எதிர்க்கிறார்களோ,அந்த சித்தாந்தத்தை சொல்லிய தலைவர்களின் படங்களை போஸ்டர்களில் பயன்படுத்தியது தவறு என்கிறார்கள்.
இந்த சுவரொட்டியை முன்னிலைப்படுத்திக்கொண்டு மதுரையை சேர்ந்த பிரபல தலைவர் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் ரசிகர்களை கொண்டு சென்று விடக்கூடாது என்று நினைக்கிறார்களாம் . அந்த பிரமுகர் ரஜினியின் பரம ரசிகர்தான். தலைமைதான் முடிவு செய்யவேண்டும் . அவரை இணைப்பதால் மன்றத்துக்கு பலம் என்பதை மறுக்க முடியாது. அவர் பெயர் மு.க.அழகிரி .அவரை இணைத்துக்கொள்கிற எண்ணம் ரஜினிக்கு இருக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால் தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினியை முன்னிறுத்தி பரபரப்பான அரசியல் விளையாட்டு தமிழகத்தில் நடக்கப்போகிறது என்பது உறுதி.
திராவிட அரசியலா ,ஆன்மீக அரசியலா என்கிற சித்தாந்த மோதலின் பின்னணியில் இந்து என்கிற மத அரசியலும் நடக்கப்போகிறது .பார்க்கலாம்.!












