
திரைப்பட ரசிகர்களால் அன்புடன் ‘தளபதி’ என அழைக்கப்படுகிறவர் நடிகர் விஜய்.
இந்த சிறப்பு பெயரடை முதலில் தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இருந்தது. திமுகழக உடன்பிறப்புகள் பெருமையுடன் தளபதி என அவரை அழைத்தார்கள்.
முதல்வர் பதவியை ஸ்டாலின் ஏற்றதும் தளபதி தானாக மறைந்து தற்போது தலைவர் ,முதல்வர் என்கிற அடை மொழிகளை பயன் படுத்துகிறார்கள்.தளபதி என்பதை விஜய் ரசிகர்கள் சுவீகரித்துக் கொண்டுவிட்டார்கள்.
லியோ படப்பிடிப்பிலிருந்து விஜய் தன்னை விடுவித்துக்கொண்டதும் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்திருக்கிறார். சீராக செய்துகொண்ட சிகை அலங்காரம் அவரது எழிலை எடுப்பாக காட்டியது. முகத்தில் கவர்ச்சி இருந்தது.இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கு தற்போது நடந்துவிட்ட ரசிகர்கள் சந்திப்பு, அடிக்கல் நாட்டியிருப்பதாக சொல்லப்படுவது உறுதியானதாக இருக்க முடியுமா?
அல்லது சூப்பர் ஸ்டார் ரஜினியைப் போல தளபதி விஜய்யும் வெறும் பார்வையாளராக மாறக்கூடிய நிலை ஏற்படுமா?
ஆனால் அந்த நிலை இவருக்கு வராது ! நம்பிக்கை இருக்கிறது.!
அரசியல் பிரவேசம் ,முதல்வர் கனவு இவையெல்லாம் தளபதி விஜய்க்கு சாத்தியமா ?
முதலில் பாசிட்டிவ் என்ன என்பதை பார்க்கலாம்!
நிஜ வாழ்க்கையில் அவர் நல்லவராக இருக்கலாம் .விஜய் மக்கள் இயக்கம் வழியாக ரத்த தானம் செய்வது வரவேற்கக்கூடியதுதான் . இவருக்கு முன்னதாக உலகநாயகன் கமல்ஹாசன் ரத்த தானம் ,உடல்தானம் செய்வதை இயக்கமாகவே நடத்தி வருகிறார்.
தனது உடலை தானமாக எழுதி வைத்து விட்டவர் கமல்ஹாசன் என்பதை நினைவில் வைத்துக்கொள்க. இவரது ரசிகர்கள் கண்தானம் செய்வதையும் கொள்கையாக ஏற்றுள்ளனர்.
விஜய் மக்கள் இயக்கம் வழியாக அதிக நற்பணிகள் நடந்திருக்கின்றன.பிற நடிகர்களும் நற்பணி செய்துவருகிறார்கள்.
தனது மன்றத்தினர்க்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படும் என்பதாக சிவகார்த்திகேயன் அறிவித்திருப்பதை இங்கு நினைவூட்டலாம்.
விஜய் இயக்கம் கல்விப்பணியாற்றி வருகிறது. விஜய் கனிவானவர்.தாராள மனம் உள்ளவர்.அண்மையில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியருக்கு நிதி உதவி செய்ததை மறக்க முடியாது.
திரைப்படம் வழியாக நல்ல பெயர் பெற்றிருக்கிற இவர் இளைஞர் என்பது அரசியலில் வரவேற்கப்படும்.
நாட்டிலுள்ள பெரும்பான்மையான அரசியல் தலைவர்கள் முதியவர்கள்தானே.! இளைஞர்கள் வருவதால் அரசியலில் புதிய சிந்தனைகள் மலரக்கூடும் என நம்பலாம் 
சரி ,இவரது நெகட்டிவ் எவை என சொல்லலாம்?
அனுபவமின்மை.!
நாட்டில் பிரச்னைகள் எழும் போதெல்லாம் இவர் வாய் மூடி மவுனியாகவே இருந்திருக்கிறார். தனது திரை உலக வாழ்க்கை பலவீனமாகும் என்கிற அச்சம் காரணமாக அமைதி காத்திருக்கிறார் என்கிற சந்தேகம் எழாமல் இல்லை.
மாநிலத்தின் முதல்வர் பதவி என்பது ‘ஜோக் ‘இல்லை. அறிவு ,சிந்தனை ,நெறிப்படுத்துகிற தைரியம், முடிவெடுக்கும் திறன் ,தலைமைப்பதவிக்கு உரிய ஆண்மை ,அச்சமின்மை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். தள பதி விஜய்க்கு இருக்கிறதா?
தன்னைக் காத்துக்கொள்வதற்காக முதல்வராக இருந்த ஜெயலலிதாவை சந்திப்பதற்கு ஊட்டி சென்றவர் ,சந்திக்காமலேயே திரும்பியதன் காரணம் என்ன?
இத்தனை காலமும் அமைதியாக இருந்துவிட்டு தற்போது திடீரென அரசியலுக்கு வரக்காரணம் என்ன ? ( இன்னும் அரசியல் பிரவேசம் பற்றி அறிவிக்கவில்லை.) திரைப்பட வாழ்க்கை அலுத்துவிட்டது அல்லது முடிவுக்கு வரப்போகிறது என்பதால் அரசியலுக்கு வரப்போகிறாரா?
ஒன்றிய அரசியல், மாநில அரசியல் பிரச்னைகள் புதை குழியாக மாறிவிட்ட நிலையில் விஜய்யினால் என்ன செய்ய முடியும்.?
தமிழக ஆளுநர் மீது அரசியல் கட்சிகள் கருத்துகள் சொல்லிவரும் நிலையில் இவர் எதுவும் சொல்லாமல் இருப்பது ஏன் ?
பதில் சொல்லவேண்டிய கடமை தளபதி விஜய்க்கு இருக்கிறது.சராசரி வாக்காளனின் சந்தேகங்களை சொல்லியாகிவிட்டது. இனி தளபதி என்ன முடிவு எடுப்பாரோ , அதற்கு மக்கள் எப்படி ரீ ஆக்ட் பண்ணுவார்களோ ,?ஜனநாயகம் வெல்க.!












