தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் பண்ணைப்புரம் கிராமத்தில் பிறந்த இளையராஜா. கடந்த 1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில், வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம்தான் தனது இசைப்பயணத்தை தொடங்கினார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா, திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலான சாதனைகளைப் படைத்துள்ள இவர், 8,600-க்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.இதுவரை, 7 ஆயிரம் பாடல்களை எழுதியுள்ளார். பல்வேறு விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ள இவர், இந்தியாவின் உயரிய விருதுகளான ’பத்ம பூஷன்’ மற்றும் ’பத்ம விபூஷன்’ ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும், ஆசியாவிலேயே முதன்முதலாக ’சிம்பொனி’ இசையமைத்தவர் என்ற பெருமைக்கு உரியவராகவும் உள்ளார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில்உருவாகி வரும் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருவதன் மூலம் இன்றளவும் தனது இசைப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘மஞ்சணத்தி’ உள்பட பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் தனது83 வது பிறந்த நாளை இன்று கோடம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில், நிர்வாகிகள் ,ஊழியர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ‘கேக் ‘வெட்டி கொண்டாடினார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்க அதிகாலை முதலே அவரது அலுவலகம் முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். இளையராஜா அலுவலகத்திற்கு வந்த போது ”நலம் வாழ எந்நாளும்.. என் வாழ்த்துகள்.. தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்” என்ற இளையராஜாவின் பாடலை கும்பலாக இணைந்து பாடி வரவேற்றனர்.ரசிகர்கள் இளையராஜாவுக்கு சால்வை அணிவித்தும் பூங்கொத்துகள் கொடுத்தும் வாழ்த்து தெரிவித்து,அவருடன் புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
தமிழக முதல்வர் விஜய், தனது எக்ஸ் தளப்பதிவில், ” இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.தேனி மாவட்டம், பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசைப் பயணத்தைத் தொடங்கி, அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் கால்பதித்து, உலகப் புகழ்வாய்ந்த சிம்பொனி இசை வரை பல சாதனைகளைப் படைத்து, இசை உலகின் மகுடமாகத் திகழ்ந்துவரும் இசைஞானி இளையராஜா அவர்கள் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகிறார்.
உங்கள் இசை இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகவும், ஊக்கமாகவும் தொடர்ந்து ஒலிக்கட்டும். தமிழர்களின் பெருமையாக விளங்கும் தங்களுக்கு எங்களின் அன்பும், மரியாதையும் கலந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது சமூக வலைதள பதிவில் பதிவிட்டுள்ளதாவது, “இசையால் நம்மை என்றென்றும் ஆளும் இசைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! தலைவர் கலைஞர் மீது கொண்ட மதிப்பின் காரணமாகத் தனது பிறந்தநாளையே ஒரு நாள் முன்னதாக மாற்றிக் கொண்டவர். ‘இசைஞானி’ என்று தலைவர் கலைஞர் பட்டம் சூட்டினார். ‘அன்னக்கிளி’யில் தொடங்கி சிம்பொனி வரையிலான ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார் .
மக்கள் நீதி மய்யக்கட்சியின் தலைவர் உலகநாயகன் கமல்ஹாசன் விடுத்துள்ள பிறந்த நாள் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, ” உங்க இசை உங்க வயசைப் போல பல நூறு மடங்கு வாழும் என்று இளையராஜாவுக்கு மநீம கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீங்களும் எங்கள் பேராசைகளையெல்லாம் கடந்த ஆயுளைப் பெற்று வாழ வேண்டும், இசையோடு” என்று தெரிவித்துள்ளார்.












