
உந்து சக்தியாக இருந்த இயக்குநர் இமயம் இன்று நம்மோடில்லை. இயற்கை அடைந்து விட்டார்
.தமிழ்ச்சினிமாவின் திசை மாற்றிய மாபெரும் கலைஞன் பாரதிராஜா.
அவரது இயற்பெயர், காரணப்பெயர் என்றெல்லாம் கதை சொல்ல வேண்டியதில்லை.
புதுக்கருத்துகளை தமிழ்ச்சினிமாவில் பேச வைத்தவர்.
மூடக்கருத்துகளை தின்று வளர்ந்து கொண்டிருந்த சினிமாவை மாற்றியவர்களில் ஒருவர் டாக்டர் கலைஞர் ,மற்றவர் இயக்குனர் இமயம்.
இந்துப் பையனும் ,கிருத்துவப் பெண்ணும் காதலிப்பது மாதிரி படம் எடுத்தால் ஓடுமா?மத விரோதமாச்சே ,சகித்துக்கொள்ளுமா சமுதாயம் என்றெல்லாம் பேசியவர்களின் வாயை அடைத்தவர் பாரதிராஜா .நன்னீர் ஓடும் கால்வாயில் விரிந்து கிடந்த ஆகாயத்தாமரைகள் நீக்கம் பெற்ற காலத்தின் பிதாமகன் நம்ம பாரதிராஜா.
,முரளி என்கிற கார்த்திக்கும் , ராதா என்கிற சேச்சி ராதாவும் அலைகள் ஓய்வதில்லையாக அகிலத்துக்கு அறிமுகமானார்கள்.கவர்ச்சிப்பேழையாக அடையாளம் காணப்பட்ட சில்க் ஸ்மிதாவை கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆக செல்லுலாயிடு உலகத்துக்கு மாற்றி காட்டினார் இயக்குநர் இமயம்.தமிழ்த்திரை உலகம் விழித்துக்கொண்டது. இன மான உணர்வு கலை உலகத்துக்கும் இருக்கிறது என்பதை வெளிக் கொணர்ந்தவர்தான் நம்ம அல்லிநகரத்து ராஜா.தொடர்ச்சியாக புதிய கருத்துகளை சொன்னார்.அவர் இயக்கிய அத்தனை படங்களும் வெற்றி கண்டன. சில விதி விலக்கு. 
தமிழீழத்தில் இனப்படுகொலை நடந்தபோது ,தமிழ்த்திரை உலகமும் சினந்து எழுந்தது. தமிழ்த்திரை உலகம் அதுநாள்வரை கண்டிராத புரட்சி. .கருப்பு சட்டைகளாக திரை உலகம் மாறியது .
அந்த நேரத்தில்தான் யாருமே துணிந்திராத ஒரு ஆயுதம் எடுத்தார் பாரதிராஜா .ஈழத்தில் போராடுகிற தமிழர்களுக்கு ஒன்றிய அரசு ஆதரவாக செயல்படுவதற்கு உந்து சக்தியாக இருக்கும் என்கிற எண்ணத்தில் எடுக்கப்பட்ட முடிவு.
“நான் மத்திய அரசு கொடுத்த விருதை தீயிடப் போகிறேன்.!”
அதிர்ந்தவர்களில் முக்கியமானவர் இயக்குநர் சேரன். மொத்த திரை உலகத்தினரும் அப்படி செய்ய வேண்டாம் என்று மறுத்து காரணங்களை சொன்னார்கள். ஒரு வழியாக அந்த விருதை திருப்பித் தந்து விடலாம் என அவரை சமாதானம் செய்து அன்றைய கோபத்தை தணித்தார்கள்.
இப்படி எத்தனையோ நிகழ்வுகள்.சொல்லிக்கொண்டே போகலாம்.அவருடன் நான் பழகிய நாட்களை மறப்பது அத்துணை எளியதல்ல.மரித்துப்போகாத நினைவுகளுடன் பாரதிராஜாவை கடக்க நினைக்கிறேன்.
—-தேவிமணி.












