தமிழில் டேட்டிங் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு புதிய கோணத்தை தரும் வகையில், ஜியோஹாட்ஸ்டார் தனது புதிய ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘செகண்ட் லவ்’-ஐ அறிவித்துள்ளது. ஜூலை 13 முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். காதலுக்கு இன்னொரு வாய்ப்பு எல்லோருக்கும் உள்ளது என்ற கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.ஜியோஹாட்ஸ்டார் தமிழ், ‘செகண்ட் லவ்’ நிகழ்ச்சியின் முதல் புரோமோவை வண்ணமயமான இசை வீடியோவாக வெளியிட்டுள்ளது. நிகழ்ச்சி குறித்து நடிகை ரம்யா கிருஷ்ணன் உற்சாகமாக விவரிக்க, ஸ்ருதிகா அர்ஜூன் நிகழ்ச்சியின் கியூபிட்டாக வருகிறார். நம்பிக்கை, காயங்களில் இருந்து மீள்வது மற்றும் மீண்டும் காதலை கண்டடையும் மகிழ்ச்சியை இந்த புரோமோ மூலம் பார்க்கலாம். புரோமோவின் இறுதியில், “காதலுக்கு காரணம் தேவையில்லை. இது காதலின் பிராண்ட் நியூ சீசன்” என இந்த நிகழ்ச்சியின் கேப்ஷனை ரம்யா கிருஷ்ணன் சொல்கிறார்.

கடந்த காலத்தை விட்டு விலகி, வாழ்க்கையில் புதிய உறவையும், புதிய காதலையும் தேடும் நபர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கும் வித்தியாசமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக ‘செகண்ட் லவ்’ இருக்கும். உணர்வுப்பூர்வமான தருணங்கள், நம்பிக்கை, நகைச்சுவை மற்றும் மனித உறவுகளை இணைக்கும் இந்த நிகழ்ச்சி, நவீன கால உறவுகளையும், மீண்டும் காதலை ஏற்றுக்கொள்ளும் துணிச்சலையும் புதிய கோணத்தில் வழங்க இருக்கிறது.
பிக் பாஸ் போன்ற மிகப்பெரிய வெற்றிப் பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, தரமான மற்றும் புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை இந்திய ரசிகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது ஜியோஹாட்ஸ்டார் மற்றும் பனிஜாய் ஆசியா கூட்டணி. தற்போது ‘செகண்ட் லவ்’ மூலம் மீண்டும் புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சியை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.












