சிம்பு நாயகன், கல்யாணி பிரியதர்ஷன் நாயகி, வெங்கட் பிரபு இயக்கம் ,தயாரிப்பு சுரேஷ் காமாட்சி ,படப்பெயர் மாநாடு. அட்டகாசமான அரசியல் படம் என அட்டகாசமாக அறிவித்தார்கள்.
ஆனால் நிலையில் இருந்து தேர் ஒரு அங்குலம் கூட நகரவில்லை.
சுரேஷ் காமாட்சி எவ்வளவோ மட்டையைக் கட்டிப் பார்த்தார்.சமாளித்தார், சுருக்கமாக சொல்வதானால் மனசாட்சிக்கு விரோதமாக பொய் சொன்னார்.
கடைசியில் அவரே இன்று ‘நாகரீகமாக வேறு ஒரு நடிகருடன் மாநாடு பின்னர் கூடும் என அறிவித்திருக்கிறார்.
தற்போது சபை கலைந்து விட்டது.
பொதுக்குழு,செயற்குழு கூடி புதிய மாநாடு பற்றிய அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.
வணக்கம்… நான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி..
மிக மிக வருத்தத்திற்குரிய ஒரு முடிவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அன்புத் தம்பி சிம்பு ஒரு பெரிய பொறுப்பை கொடுத்தார்.
தன்னை வைத்து மாநாடு படத்தை எடுக்க என்னை தூண்டி… துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால் காலமும் நேரமும் கடந்துகொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது.
எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்கிறவன் அந்த தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கிறான் என்று நம்புகிறவன் நான்.
ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிழ்ந்ததே தவிர படம் தொடங்க இயலவில்லை.
அதனால் சிம்பு “நடிக்க இருந்த” மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை.
சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும்.இதுவரை என்மீது அன்பு செலுத்திய அவரின் ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
பத்திரிகையாளர்கள் அவ்வளவு துணை நின்றார்கள். எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
வெங்கட் பிரபு இயக்க மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும். அனைவருக்கும் நன்றியும் அன்பும்!!
-சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர்