
ஒற்றை ஆளாக காலத்தில் இறங்கியவர் ஆர்.ஜே .பாலாஜி.
ஆளும் கட்சியின் வெறுப்பை சம்பாதிப்பதற்கு தளபதி விஜய்க்கு பல்லாண்டுகள் ஆனது.
ஆனால் பாலாஜிக்கு ?
பல ஆண்டுகள் தேவைப்படவில்லை. கடுமையான எதிர்ப்பினை சம்பாதித்து வைத்திருக்கிறார். எல்.கே.ஜி.படத்தில் இவர் சுழற்றிய சாட்டையின் வீச்சு இன்றும் அதிமுகவுக்கு நினைவில் நிற்கிறது. எதற்கு ஆளும் கட்சியின் கோபத்துக்கு உள்ளாக வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ ‘மூக்குத்தி அம்மனின்’அருள் தேடி நிற்கிறார்.
இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.பாலாஜிக்கு ஜோடி.
இந்த படத்தை பாலாஜி ,என்.ஜெ.சரவணன் இருவரும் இணைந்து இயக்குகிறார்கள். வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தயாரிக்கிறார். படத்தின் 90 சத படப்பிடிப்பு முடிந்திருக்கிறது.
இந்த படம் பற்றி பாலாஜி என்ன சொல்கிறார்?
“டாக்டர் .ஐசரி கணேஷ் போன்ற ஒரு தயாரிப்பாளர் நம் பக்கம் இருந்தால் எதுவும் சாத்தியமே. அவர் போன்ற ஒரு தயாரிப்பாளர் இருக்கும் போது நாம் படப்பிடிப்பில் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. நாம் கவலைகொள்ள வேண்டிய ஒரே விஷயம் நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அளவில்லா சுதந்திரத்தை எப்படி வீணாக்காமல் பயன்படுத்துவது என்பது தான்.
அதைப் படக்குழு தெளிவாக உணர்ந்து வேலை செய்திருக்கிறோம். படத்தை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உருவாக்குவது ஒன்று தான் எங்கள் குறிக்கோள். அவர்களின் எதிர்பார்ப்பை கண்டிப்பாக பூர்த்தி செய்வோம். மொத்த படக்குழுவும் படத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறது. நவம்பர் 29, 2019 அன்று படப்பிடிப்பை துவக்கி 44 நாட்களில் 90 சதவீத படப்பிடிப்பை முடித்திருக்கிறோம். இன்னும் ஒரே ஒரு வார சென்னை படப்பிடிப்புடன் மொத்த படப்பிடிப்பையும் முடிக்கவுள்ளோம் .
இயக்குநர் சரவணன் இல்லையென்றால் இத்தனை சீக்கிரம் படப்பிடிப்பை முடித்திருக்க முடியாது. நயன்தாரா இப்படத்திற்காக தந்திருக்கும் அர்ப்பணிப்பு வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. இந்த கதாப்பாத்திரத்திற்காக அவர் விரதம் இருந்திருக்கிறார்.(அப்படியா ,பாஃ ரினில் வான்கோழி சாப்பிட்டது?) தன் முழு ஆத்மாவையும் ஒருங்கிணைத்து பணிபுரிந்திருக்கிறார். இப்படம் அவர் சினிமா வாழ்வில் வெகு முக்கியமான படமாக என்றென்றும் நிலைத்திருக்கும். மேலும் அவரது கதாப்பாத்திரம் படத்திற்கு பெரும் பலமாகவும் இருக்கும்” என்றார்.
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் என்ன சொல்கிறார் என்பதையும் கேட்கவேண்டும் அல்லவா? பணம் போட்ட முதலாளி ஆச்சே!
“ஒரு மிகப்பெரிய நட்சத்திரத்தை வைத்துகொண்டு இப்படக்குழு இவ்வளவு சீக்கிரமாக முக்கால்வாசி படத்தை முடித்திருப்பது எனக்கு பெரும் ஆச்சர்யமே. பாலாஜியும் அவரது குழுவும் ஒரு மிகப்பெரும் பணியை வெகு சுலபமாக முடித்திருக்கிறார்கள். அவர்கள் சினிமா மீது வைத்திருக்கும் காதலும், அவர்களது திறமையும் தான் இதற்கு காரணம். தயாரிப்பாளர் விரும்பும் இயக்குநராக பலகாலம் அவர் தமிழ் சினிமாவில் நிலைத்திருப்பார். கதையை சொல்லும் விதத்தில் மட்டுமல்லாது அதனை உருவாக்கும் நேர்த்தியிலும் தயாரிப்பாளருக்கு பிடித்தவராக இருக்கிறார் பாலாஜி. நயன்தாரா இப்படத்திற்கு கொடுத்திருக்கும் உழைப்பு அற்புதமானது. அவர் விரதம் இருந்து வெகு பக்தியுடன் இந்த கதாபாத்திரத்தை செய்திருக்கிறார். “என்கிறார்.
மௌலி, ஊர்வசி மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். “அவள்” படத்தின் இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்திருக்கிறார். “தானா சேர்ந்த கூட்டம்” பட ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.












