தமிழ் திரையுலகில் தனது அசாத்தியமான பின்னணி இசை மற்றும் தனித்துவமான இசை மொழியால் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஒரு மாஸ் அடையாளத்தை உருவாக்கி வருபவர் பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இவரது மிரட்டலான இசையமைப்பில், தமிழ் சினிமாவில் முன்னணி ஹாரர் பட இயக்குநரான அஜய் ஞானமுத்து இயக்கத்தில், ‘ஹாரர் கிங்’ அருள்நிதி நடிப்பில் ஒட்டுமொத்த ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பிரம்மாண்ட பேய் படமான “டிமான்டி காலனி 3” (Demonte Colony 3) திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான “ரத்தத்த தா” தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி இசை ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஏற்கனவே வெளியான இதன் முந்தைய பாகங்கள் பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் சாதனை படைத்த நிலையில், இந்த மூன்றாவது பாகத்தின் முதல் பாடலே ரசிகர்களுக்கு ஒரு பக்கா த்ரில்லிங் அனுபவத்தைத் தந்துள்ளது.பிரபல பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுதியுள்ள ஆழமான மற்றும் மிரட்டலான பாடல் வரிகளுக்குச் சாம் சி.எஸ் மிகவும் விறுவிறுப்பாக இசையமைத்துள்ளதோடு, இந்தப் பாடலை அவரே தனது அசாத்தியமான மற்றும் அசத்தலான குரலில் பாடி அசத்தியுள்ளார்.
பாடலின் ஒவ்வொரு வரியிலும் கதையின் இருண்ட மற்றும் பயமுறுத்தும் மனநிலையை ரசிகர்களுக்கு உணர்த்தும் வகையில் அவரது குரலும், இசையும் ஒன்றோடொன்று கலந்து பார்ப்பவர்களை உறைய வைக்கிறது. இத்திரைப்படத்தின் மையப்புள்ளியாக இருக்கும் மெயின் வில்லனின் கொடூரமான நரக உலகைக் காட்சிப்படுத்தும் நோக்கில் இந்த “ரத்தத்த தா” பாடல் பிரம்மாண்டமாகப் படமாக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தக் காட்சியும் பார்ப்பவர்களைப் பயமுறுத்தும் வகையில் ரத்த சிவப்பு நிற பின்னணியில், நரகத்தின் பல்வேறு கொடூரமான அங்கங்களைக் கண்முன் நிறுத்தும் வகையில் மிக நேர்த்தியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே வெளியான “டிமான்டி காலனி 2” திரைப்படத்திற்குத் தனது அசாத்தியமான மற்றும் மிரட்டலான பின்னணி இசையால் ஒட்டுமொத்த தியேட்டர் ரசிகர்களையும் மிரள வைத்திருந்தார் சாம் சி.எஸ். அதன் தொடர்ச்சியாக, தற்போது உருவாகி வரும் “டிமான்டி காலனி 3” படத்திற்கும் அவரே இசையமைத்து மீண்டும் தனது அசாத்திய இசை மாயாஜாலத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, தற்போது வெளியாகியுள்ள இந்த “ரத்தத்த தா” பாடலில் இடம்பெற்றுள்ள அதிநவீன சவுண்ட் டிசைன் மற்றும் மிரட்டலான இசைக் கோர்வை ஆகியவை, ஒட்டுமொத்தப் பாடலையும் கேட்கும் போதே ரசிகர்களை அப்படியே அந்த இருண்ட பேய் உலகத்திற்குள் நேரில் அழைத்துச் செல்லும் வகையில் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஹாரர் ஜானரில் தமிழ் சினிமாவில் ஒரு தனி முத்திரையைப் பதித்த இந்த டிமான்டி காலனி திரைப்படத் தொடர், மிக முக்கியமான ஹாரர்- த்ரில்லர் படைப்புகளில் ஒன்றாக ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் அஜய் ஞானமுத்து, அருள்நிதி மற்றும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் கூட்டணியில் உருவாகி வரும் இந்த மூன்றாவது பாகத்திற்கும் ஏற்கனவே திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்தப் பாடல் அந்த எதிர்பார்ப்பை இன்னும் பலமடங்கு எகிற வைத்துள்ளது.
பல்வேறு ஜானர்களில் தனது தனித்துவமான இசை அடையாளத்தைத் தொடர்ந்து பதித்து வரும் சாம் சி.எஸ், இந்த “ரத்தத்த தா” பாடல் மூலமாக மீண்டும் ஒருமுறை ரசிகர்களைத் தனது இசையால் கட்டிப்போட்டுள்ளார். வெளியான மிகக் குறுகிய நேரத்திலேயே இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி, இசை ரசிகர்களின் அலாதியான பாராட்டுகளைப் பெற்று ட்ரெண்டாகி வருகிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பான்-இந்தியா இசையமைப்பாளராகப் பிஸியாகப் பணியாற்றி வரும் சாம் சி.எஸ், தமிழில் தற்போது பல பிரம்மாண்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். அதன்படி, ரவிமோகனின் “கராத்தே பாபு”, கார்த்தியின் நடிப்பில் உருவாகும் “சர்தார் 2”, புஷ்கர்–காயத்ரி தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் மற்றும் ஒட்டுமொத்த கோலிவுட்டும் ஆவலோடு எதிர்பார்க்கும் இயக்குநர் ஹெச். வினோத் – தனுஷ் கூட்டணியின் புதிய படம் உள்ளிட்ட பல முக்கியமான மெகா பட்ஜெட் படங்களுக்கு அவரே இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












