நடிகர் விஷால் முதன்முறையாக இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள ‘மகுடம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய், மாயா, அஸ்வின் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படம், வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த விழாவில் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய நடிகர் விஷால்,
தனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரிக்கு நன்றி தெரிவித்தார். கடந்த 14 மாதங்களாகப் படங்கள் ஏதும் இல்லாமல் கடுமையான பொருளாதார மற்றும் மன ரீதியான சிரமங்களை எதிர்கொண்டபோது, தன்னை விட்டு விலகாமல் இந்த நொடி வரை தனக்கு உந்துதலாகவும் உறுதுணையாகவும் நின்றவர் தனது வருங்கால மனைவி சாய் தன்ஷிகா என்று மேடையில் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் தன் மீது வைத்த நம்பிக்கையும், கொடுத்த ஊக்கமும் வீண்போகக் கூடாது என்பதற்காகவே இப்படத்தில் மிகக் கடுமையாக உழைத்ததாகக் கூறினார்.
கேமராவிற்கு முன்னாலும் பின்னாலும் ஒரே நேரத்தில் பணியாற்றிய சவாலான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட விஷால்,
எடிட்டிங் வசதிக்காக ஒரு காட்சியில் தானே ‘ஆக்ஷன்’ என்று சொல்லிவிட்டு, சில நொடிகள் கழித்தே மற்ற நடிகர்களை நடிக்கச் சொன்னதாகக் கூறினார். “இயக்குநராக நான் காட்சிகளை நடித்துக் காட்டியபோதோ, இசை மற்றும் ஸ்டண்ட் காட்சிகளில் யோசனைகளை வழங்கியபோதோ, என் சக கலைஞர்கள் யாரும் தவறாக நினைக்கவில்லை; என்னிடம் எந்தவித ஈகோவும் காட்டாமல் ஒத்துழைப்பு தந்த அந்த நல்ல உள்ளங்களால் தான் ‘மகுடம்’ படம் இவ்வளவு சிறப்பாக உருவாகியுள்ளது” என்று படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். நடிகர்களிடம் இருந்து எப்படி நேர்த்தியாக வேலை வாங்க வேண்டும் என்ற வித்தையை இயக்குநர் பாலாவிடம் இருந்து கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், துஷாரா விஜயன், அஞ்சலி, மாயா, அஸ்வின் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தனது இயக்கத்திற்கு முழு ஒத்துழைப்பு தந்ததாகப் பாராட்டினார்.
அதேபோல், இப்படத்தில் நடித்துள்ள ஜான் விஜய் பற்றிப் பேசுகையில்,
“லயோலா காலேஜில் படிக்கும்போதே ஜான் விஜய்யால் பெரிய கலவரமே நடந்திருக்கிறது. அப்போதிலிருந்தே எனக்கு அவரை நன்றாகத் தெரியும்.ாரின் இயல்பான மேனரிசத்தை அப்படியே இந்தப் படத்தில் பயன்படுத்தியுள்ளேன்” என்றார். தொடர்ந்து, படத்தில் பணியாற்றிய பாடலாசிரியர்கள் உமாதேவி, ஏகாதசி, விவேக், கருணா ஆகியோரின் வரிகளுக்கும், திலீப்பின் சிறந்த புரிதலுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும், இப்படத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையைப் பயன்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட விஷால், அவருக்குத் தனது பிரத்தியேக நன்றியைச் சமர்ப்பித்தார்.

தொடர்ந்து பேசிய விஷால்,
“இயக்குநராக வேண்டும் என்பது எனது 35 வருட காலக் கனவு. ஆரம்ப காலத்தில் இயக்குநர் அர்ஜுனியிடம் என்னை உதவி இயக்குநராகச் சேர்ப்பதற்காக, எனது தந்தை நான்கு மணி நேரம் காத்திருந்தார். அன்று முதல் இன்று வரை எனது கனவுக்குப் பக்கபலமாக இருந்து, அதனை நிறைவேற்றி வைத்த என் தந்தைக்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். அதேபோல், என் திரைப்பயணத்தில் ‘சண்டக்கோழி’ திரைப்படம் ஒரு மிக முக்கியமான திருப்பம். அந்தப் படம் உருவாவதற்கு என் அம்மா தான் முழு காரணம். என் அப்பாவிடம் நீங்க செலவு பண்ணலன்னா நான் செலவு பண்றேன் என்று சொல்லி என்னை அந்தப் படத்தில் நடிக்க வைத்தார்” என்று நெகிழ்ந்தார்.
மேலும், “ஆர்.பி செளத்ரி சார் சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்திய 45-ஆவது புதுமுக இயக்குநர் நான் என்பதில் பெருமையடைகிறேன். சூப்பர் குட் பிலிம்ஸின் 99-ஆவது திரைப்படமாக ‘மகுடம்’ உருவாகியுள்ளது. இந்த இடத்தில் என் குருநாதர் ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன் சாருக்கு நன்றி சொல்லிக்கிறேன். அவரிடம் நான் இயக்குநராக நிறைய நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். இயக்குநர் ராம்கோபால்வர்மாவின் ‘உதயம்’ படம் பார்த்த பிறகுதான் எனக்கு இயக்குநராக வேண்டும் என்ற ஆசை வந்தது. இன்று அந்தப் பெரிய கனவு நனவாகியிருக்கிறது. நம் கனவுகளில் நாம் உறுதியாக (Confidence) இருந்தால் நிச்சயமாக அது நிறைவேறும்” என்று கூறினார்.
தொடர்ந்து படக்குழுவினரைப் பற்றிப் பேசுகையில்,
“இன்று தேவி அறக்கட்டளை மூலம் என் பசங்க (மாணவர்கள்) நிறைய பேர் பட்டதாரிகளாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு அவர்களின் மன உறுதிதான் காரணம். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் தம்பி ரிச்சர்ட் எனக்குப் பல வருடங்களாகப் பழக்கம் என்பதால் என் டேஸ்ட் அவருக்கு நன்றாகப் புரியும். இயக்குநர் சுந்தர் சி சார் படப்பிடிப்பில் எல்லாச் சூழலையும் மிக இலகுவாகக் கையாள்வார், அவரிடமிருந்தும் நான் நிறைய கற்றுக் கொண்டேன். வசனகர்த்தா பொன்.பார்த்திபன் சார் என்னோடு எப்போதும் நன்றாக சிங்க் ஆகும் ஒரு ரைட்டர். இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தற்போது பின்னணி இசை (RR) கோர்ப்புப் பணிகளில் தீவிரமாக இருப்பதால் இந்த விழாவிற்கு வர முடியவில்லை. அவர் இந்தத் திரைப்படத்திற்குத் தன் இசையால் உயிர் கொடுத்திருக்கிறார்” என்றார்.
இறுதியாகப் படத்தின் ஹைலைட்ஸ் மற்றும் ரிலீஸ் குறித்துப் பேசிய விஷால்,
“இப்படத்திலுள்ள க்ளைமாக்ஸ் காட்சி இதுவரை வேறு எந்தத் தமிழ் படத்திலும் வந்ததில்லை. படத்தின் கடைசி எட்டு நிமிடங்கள் திரையரங்கில் ஒரு மிகப்பெரிய மேஜிக் செய்யும். எனக்குப் பிடித்த நடிகர் விஜய் அண்ணன் இன்று தமிழக முதல்வராக இருக்கிறார். திரையரங்கில் தளபதி விஜய் படத்தை நான் எப்படி ரசித்துப் பார்ப்பேனோ, அதே ரோஹினி தியேட்டரில் என் ‘மகுடம்’ படத்தையும் ரசிகர்களோடு அமர்ந்து பார்க்கப் போகிறேன். படத்திற்கு இன்னும் சில சிக்கல்கள் இருக்கின்றன, ஆனால் அதையெல்லாம் தாண்டி படம் நிச்சயமாக வரும் ஆகஸ்ட் 14 அன்று திரைக்கு வரும். ஆகஸ்ட் 16-ஆம் தேதி நடக்கும் படத்தின் வெற்றிவிழாவில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன், அப்போது பல அதிரடியான விஷயங்களைப் பேசுகிறேன். படத்தைத் தியேட்டரில் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்” என்று கூறி விடைபெற்றார்.












