தமிழ் சினிமா ரசிகர்களை மர்மக் கதைகளின் புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும் நோக்கில், ‘டி3’ படத்தின் இயக்குநர் பாலாஜி இயக்கியுள்ள ‘தி டார்க் ஹெவன்’ (The Dark Heaven Movie) திரைப்படம் வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.
கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ள இத்திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய விழா சென்னை பிரசாத் லேப்பில் அண்மையில் நடைபெற்றது. நாட்டார் கதைகளின் மர்மங்களையும், கொலையும் கொலை சார்ந்த ஒரு துப்பறியும் பின்னணியையும் கொண்டுள்ள இப்படத்தில், பிக்பாஸ் புகழ் சித்து மற்றும் தர்ஷிகாவுடன் நடிகை ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தென் தமிழகத்தின் குற்றாலம், தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் முக்கூடல் போன்ற பகுதிகளில் இதுவரை எந்தவொரு திரைப்படக் கேமராவும் நுழையாத அரிய இடங்களைத் தேடிப் பிடித்து இதன் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.
மேடையில் பேசிய நடிகை ரித்விகா
, தமிழ் சினிமாவில் பொதுவாக வரும் போலீஸ் விசாரணை, முகமூடி மனிதன் போன்ற வழக்கமான த்ரில்லர் பாணிகளை உடைத்து, ‘தி டார்க் ஹெவன்’ ஒரு புதிய திரையரங்க அனுபவத்தைத் தரும் என்றார். ஒரே ஒரு சரியான காட்சிக்காகக் கூட இயக்குநர் பாலாஜி பல மணிநேரம் லொகேஷன்களில் காத்திருந்து உழைத்ததாகக் குறிப்பிட்ட அவர், படங்களை ஓடிடி-யில் பார்க்கும் வழக்கத்தைத் தவிர்த்து, ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து நம்பிப் பார்க்கலாம் எனத் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் பாலாஜி, இப்படத்தின் டீஸர் மற்றும் டிரெய்லரின் வெற்றிக்கு ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் அசாத்திய உழைப்புதான் காரணம் என்றார். மேலும், கதையில் வரும் நான்கு பிரதான கதாபாத்திரங்களில் நடிகை ரித்விகா ஏற்றுள்ள பாத்திரம் படம் வெளியான பிறகு திரையுலகில் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்று நெகிழ்ந்து பாராட்டினார்.

இறுதியாகப் பேசிய கதை நாயகன் சித்து,
தங்களது ஆரம்பக் காலத் திரைப்பயணத்திலேயே ஒரு முழு நீளக் காவல் துறை (Cop Story) கதையில் நடிக்கும் வாய்ப்பு அனைத்து ஹீரோக்களுக்கும் அமைந்துவிடாது என்றும், தனக்கு முதல் படத்திலேயே அந்த பாக்கியத்தைக் கொடுத்த இயக்குநருக்கு நன்றி என்றும் கூறினார். படப்பிடிப்புத் தளத்தில் வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி போன்ற மூத்த ஆளுமைகளுடன் இணைந்து பணியாற்றியது தனக்கு ஒரு சிறந்த நடிப்புப் பல்கலைக்கழகம் போல் அமைந்தது என்று நெகிழ்ந்த சித்து, வரும் செப்டம்பர் 18-ஆம் தேதி அனைவரும் திரையரங்கு சென்று இப்படத்தைப் பார்த்து ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.












