ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படம் பெரும் தோல்வியடைந்ததால், சிம்புவின் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்திருக்கிறார். இப் புகாரின் அடிப்படையில் சிம்புவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தயாரிப்பாளர் சங்கம். மேலும் சிம்பு எந்த படத்திலும் நடிக்க முடியாதபடி அவருக்கு ‘ரெட்’கார்டு போட்டுள்ளார்கள். இந்நிலையில் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சிம்பு தனக்கு ரூ 20 கோடிநஷ்டம் ஏற்படுத்தி விட்டதால் தான் வீடு வாசல் விற்று, நடுத்தெருவில் நிற்பதாகவும் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.இவ்விவகாரம் குறித்து இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்து மைக்கேல் ராயப்பன் கூறியதாவது,
சிம்பு தன்னை வைத்து படம் எடுக்கும்படி கூறி, “நான் ஒழுங்காக படப்பிடிப்புக்கு வருவேன். ஐந்தாயிரம் ரூபாய் கூட என்னிடம் இல்லை.பணத்தின் அருமையையும் இப்போது உணர்ந்து விட்டேன். எனவே ஒழுங்காக நடிக்க முடிவு செய்து உள்ளேன். கண்டிப்பாக முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்” என்று கண்ணீர் மல்க கூறினார். சிம்புவின் அப்பா – அம்மா முன்னாடி தான் பணத்தை கொடுத்தேன். பல தயாரிப்பாளர்களும் சிம்புவை வைத்து படம் எடுக்கிறீர்களா?. அவர் சரியாக படப்படிப்புக்கு வரவே மாட்டார் என்று சொன்னார்கள்.
ஆனால் நான் அவர் மீது நம்பிக்கை வைத்தேன் . ஆனால் அது எவ்வளவு பெரிய தவறு என்பது பின்னாடி தான் புரிந்தது.
2 – 10 மணி கால்ஷீட் என்றால் 10 மணிக்கு சிம்பு வருவார். அவர் வந்து 5 நிமிடம் கூட நடிக்க முடியாதுன்னு போவார். இப்படி எனக்கு பல விதத்தில் கஷ்டங்களை கொடுத்து உள்ளார். அவர் எப்போதுமே சொன்னது போல் நடந்ததே இல்லை அதான் எனக்கு பிரச்சினையே அவர் முதலில் சொன்னது போல் நடந்து கொண்டதே இல்லை. முறையாக படப்பிடிப்புக்கு வரவில்லை. சரியான முறையில் தேதிகள் குடுக்கல .இதைப்பற்றி கேட்க அவரது வீட்டுக்கு சென்ற போது என்னை பலமணி நேரம் காக்க வைத்தார். அட்வான்ஸ் வாங்கியவர் படத்தை மொத்தமாக அவரது கண்ட்ரோலில் எடுத்துக்கொண்டார். பாங்காக் வருவதாக சொல்லி ஒட்டு மொத்த யூனிட்டும் அங்கெ அவருக்காக 10 நாள் காத்திருந்தது தான் மிச்சம்.அவர் கடசி வரை வரல, இதனால் பலகோடி நஷ்டம் ஆச்சு.
படத்தின் கதைப்படியும் படத்தையும் எடுக்க விடவில்லை. இப்படி மொத்தமாக படத்தையே கெடுத்து விட்டார்.இதனால் எனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டது. படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்டத்தை என்னிடம் தரச் சொல்லி கேட்கிறார்கள். சிம்பு தான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். இப்போ நான் தான் மொத்தமா பணத்தை இழந்து, விநியோகஸ்தர்கள், கடன்காரர்கள் என அனைவருக்கும் பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். என்னை நடுத் தெருவில் நிறுத்திவிட்டார் சிம்பு. அவர் இனி திருந்தி சரியாக படம் பண்ணுவார் என்றெல்லாம் தெரியவில்லை.
இவ்வாறு மைக்கேல் ராயப்பன் கூறினார்.