உருவத்தை எடை போட எந்திரம் இருக்கிறது.ஆனால் உள்ளத்தை எடை போட?
ஏதும் இல்லை எவனும் இல்லை. திரை உலகம் இன்று வரை முகத்துக்குத்தான் முதலிடம் கொடுக்கிறது.கரடு முரடான முகமும் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த பிறகுதான் மதிக்கப்படுகிறது. உதாரணம் நாகேஷ்.
ஓர் அழகியின் உயர்ந்த இடம் இதுதான் என ‘அறம் ‘ வகுத்த பின்னர்தான் இயக்குநர் கோபி நயினாரை உலகம் கொண்டாடத் தொடங்கி இருப்பதால், அந்த மனிதனுக்குள் சமூகத்தைப் பற்றிய கவலைகள் அதிகம். உயர்வான சிந்தனைகள். ஆனால் திரை உலகம் அவரது கவலைகளை,சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளுமா?
சித்திரை வெயிலில் சில கேள்விகளுடன் ‘சினிமா முரசம்’ இணைய தளத்துக்காக கோபி நயினாரை சந்தித்தேன்.
“பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு, 5 வயது சிறுமியைக் கூட விட்டு வைக்கவில்லையே…கொடிய நோயாக பரவி வரும் இந்த பேராபத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
” இந்த சமூகம் மனிதனுடன் எம்மாதிரியாக உறவாடுகிறது என்பதிலிருந்துதான் குற்றங்களுக்கான மனோபாவம் ,தைரியம் உருவாகிறது. உணர்ச்சி வயப்பட்டு செய்கிற குற்றங்கள் அவனது அறியாமையினால் என சொல்லலாம்.ஆனால் இந்தியாவில் யாருடைய ஆளுமை மேலோங்கி இருக்கிறதோ,அவர்களுடைய சமூகப் பாதுகாப்புடன்தான் குற்றங்கள் நடக்கிறது. ஒடுக்கப்பட்ட மதத்தினர் மீது பலாத்காரம் நடக்கிறது. இதற்கு அரசு ஆதரவு என்பது சந்தேகப்படுவதற்கில்லை.
அண்மையில் ஒரு வீடியோ பார்த்தேன்.ஒரு பெண்ணை கடத்திச் சென்று சித்திரவதை செய்கிறான்.பார்ப்பதற்கே அச்சம் தருகிற அந்த வீடியோவை பரப்புகிறான். எதற்காக?
அதை பார்க்கிறவர்கள் ,அச்சப்படவேண்டும்.அந்த பெண் சார்ந்த சமூகம் பயப்படவேண்டும். இதைப்பார்த்து மற்றொரு சமூகம் சந்தோஷப்படுகிறது. ரசிக்கிறது. குரூரமல்லவா?ஆனால் இவர்களுக்குப் பின்னால் அரசு இருக்கிறது.
எனக்கு ஒரு சமூகத்தைப் பிடிக்கவில்லை என்றால் அந்த சமூகத்தை அச்சுறுத்துவது என்ன நியாயம்? தமிழ்ப் பெண்கள் மீது சிங்களர்கள் நடத்திய வன்புணர்வு படுகொலைகள் அதன் உச்சமல்லவா?
பொதுவாக குற்றம் செய்பவன் அதை மறைப்பதற்கு முயற்சிப்பான்.ஆனால் அதை பகிரங்கமாக செய்வதற்கு என்ன காரணம்?
ஒரு குழந்தையை மூன்று நாள் வைத்திருந்து வேட்டையாடி இருக்கிறார்கள். அவர்களின் வீடுகளில் மனைவி,மக்கள் என்ன நினைப்பார்கள்? இப்படிப்பட்ட மிருகத்துடனா குடும்பம் நடத்தி வந்திருக்கிறோம் சே, கேவலம் என நினைக்க மாட்டார்களா?மதிப்பார்களா?”
“இன்றைய பெண்கள் வீரம் சார்ந்தவர்களாக இல்லாமல் போனதற்கு என்ன காரணம்?”
“ஒரு காலத்தில் இனக்குழுவிற்கு தலைமை தாங்கி இருந்த பெண்கள் இன்று ஆண் ஆதிக்கத்தை சார்ந்து இருக்க வேண்டியதாக இருக்கிறது. கல்வி,குடும்பம், வேலை வாய்ப்பு இப்படி எதுவாக இருந்தாலும் ஆண் ஆதிக்கம் வலிமையுடன் இருப்பதால் அவர்களை சார்ந்து இருக்கவேண்டியதாக இருக்கிறது,!”
“தொலைக்காட்சி சீரியல்களில் பெரும்பாலும் பெண்கள் கொடூரமானவர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்களே. என்?”
“எடுக்கிறவர் ஆண்தானே! நடிப்பவர்களுக்கு அத்தகைய மனோபாவம் கிடையாது, அத்தகைய எண்ணங்கள் இல்லாதவர்களாக இருக்கலாம்,ஆனால் அத்தகைய குணம் உள்ளவர்களாக பெண்களை மாற்றுவதற்கான அபாயம்-பேராபத்து இல்லை என்பதாக சொல்லிவிட முடியாது.பெண்களின் ரசனை மீது நடத்தப்படுகிற வன்முறை!”
“இன,மான உணர்ச்சி இன்றைய மனிதர்களிடம் இருக்கிறதா?”
“யார் ஆள்கிறார்களோ,,எந்த அரசியல் பண்பு தலை தூக்கியுள்ளதோ அதுதான் சமூகத்தின் குணமாக மாறும். இந்திய சமூகம் சாதியமானது. சாதியத்தை நிலைப் படுத்த ,அதன்வழியாக மதத்தை நிலைப்படுத்த வேலை செய்கிறது.இதில் எங்கே இன,மானம் பார்ப்பது.?அது அரிது! தண்ணீர்,விவசாயம் இரண்டும் உள்ளூர் பிரச்னை இல்லை.அது உலகப்பிரச்னை. இதற்காக போராடினால் ஒரு கும்பல் பாராமுகமாக இருக்கிறது.இன்னொரு கும்பல் கிரிக்கெட் பார்க்கிறது!
இப்படி தன்னுணர்வு பெறாத தமிழ்ச்சமுதாயமாக இருக்கிறது” என வருத்தப்பட்டார் கோபி,.
சரி! சற்று சினிமா பக்கமும் பார்க்கலாமே?
“அறம் பார்ட் 2 எப்போது?”
“செப்டம்பருக்குப் பிறகுதான்!”
“நயன்தாரா கலெக்டராக தொடர்வாரா அல்லது?”
“அதை எப்படி சொல்வேன்.அதுதான் கதையின் ரகசியமே! இன்னமும் நடிக,நடிகையர் தேர்வு நடக்கவில்லை” என சிரிக்கிறார்.
-தேவிமணி .