முயல் தூங்கினால் ஆமை மட்டுமா ஜெயிக்கும், நத்தை,நண்டெல்லாம் கூட ஜெயிக்கும்,! நவரச நாயகன் கார்த்திக் கவனம் சிதைந்ததால் அந்த இடைவெளியில் யார் யாரோ வந்தார்கள்.வந்தவர்கள் லாபம் பார்த்து விட்டு போய்விட்டார்கள்..உலகநாயகன் கமல் ஹாசனுக்கு இணையாகப் பேசப்பட்டவர் கார்த்திக். அதனால்தானோ என்னவோ நம்மவர் ரிட்டையர் ஆகி பாலிடிக்ஸில் என்ட்ரி கொடுக்க கார்த்திக் மறுபடியும் பிசி ஆகி விட்டார்.
“மிஸ்டர் சந்திரமவ்லி!” என இவர் மவுனராகம் படத்தில் உச்சரிக்கும் பாணியே தனி! இவரும் ரேவதியும் நடிப்பில் ஒருவரை ஒருவர் முந்துவதற்கு பார்ப்பார்கள். மணிரத்னம் அசந்துபோன பல சீன்களும் உண்டு.
மிஸ்டர் சந்திரமவுலி என்கிற பெயரில் மகன் கவுதமுடன் இணைந்து அமர்க்களம் பண்ணியிருக்கிறார்.ஆட்டமென்ன படுத்தும்பாடு என்ன? செம ரகளை!
யுனோக் இயக்கத்தில் உதயநிதியுடன் ஒரு படமும், கார்த்தியுடன் இன்னொரு படமும் ஒப்பந்தம் ஆகி இருக்கிறது.இன்னும் இரண்டு படங்களில் நடிப்பதற்கு கதை கேட்டு வருகிறார்.
இன்று சென்னை சத்யம் தியேட்டரில் நிகழ்ந்த ‘மிஸ்டர்.சந்திரமவுலி’படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மகேந்திரன்,அகத்தியன், சூர்யா, விஷால் ,ஆர்யா ,வரலட்சுமி, சரிதாவின் தங்கை விஜி ,சூரியாவின் தங்கை பிருந்தா சிவகுமார் இன்னும் பலர் கலந்து கொண்டார்கள். ஆனாலும் கார்த்திக், பிருந்தா இருவரும்தான் அன்றைய முக்கிய செய்திகளாகி விட்டார்கள்.
அதிலும் நவரச நாயகனைப் பார்த்து ‘வில் யூ மேரி மீ?’ என்று விஜி கேட்டதும் அப்பாவை கவுதம் பார்க்க, வெட்கத்தில் கார்த்திக் நெளிய …..சூப்பர்.
பிருந்தா முதன் முதலாக பின்னணிப் பாடகியாக அறிமுகம் ஆகி இருக்கிறார். தங்கையை அண்ணன் வாழ்த்திப் பேசியது எதிர்பார்த்ததுதான் என்றாலும் தந்தை சிவகுமாரின் கடிதம் நெகிழ்வை ஏற்படுத்திவிட்டது.. காரைக்குடியில் இருந்த சிவகுமார் தனது கடிதத்தில் மகளை “பாப்பூ” என வாஞ்சையுடன் விளித்திருந்தார்.
“பாப்பூ,
சின்ன வயசிலேர்ந்து உன் பாட்டை கேட்டுக்கிட்டு வர்றேன்.
“இவள் ஒரு இளங்குருவி’ ‘போவோமா ஊர்கோலம்’ ‘போறாளே பொன்னுத்தாயி ‘ ‘அந்தியிலே வானம்’ – ரொம்ப அழகா பாடுவே…
‘போறாளே பொன்னுத்தாயி’-உன்னைப்பாடச் சொல்லி கண்ணீர் விட்டுட்டே பல நாள் தூங்கியிருக்கேன். அஞ்சரை கட்டை சுதிலே சாதாரணமா பாடறான்னு பாட்டு வாத்தியார் விஜயா நடராஜன் சொன்னது இன்னும் ஞாபகம் இருக்கு.
‘குனித்த புருவமும் கொவ்வைச்செவ்வாயும்’ ராஜபாட்டை புத்தக வெளியீட்டு விழாவில் நீ பாடியதை வாலி சார் கேட்டுட்டு’ உம் பொண்ணுக்கு நல்ல சாரீரம் இருக்கப்பா’ன்னாரு.
அண்ணனுங்க சிபாரிசில நீ சுலபமா வாய்ப்புத் தேட முடியும்.
தானா உன்னைத் தேடி வாய்ப்பு வர்றதுதான் பெருமை. எத்தனை மேடைகளில் நீ பாடறதை கேட்டாலும் இப்படி ஒரு ரிக்கார்டிங் தியேட்டர்ல பதிவு பண்ணி கேட்கும்போது ‘திரில்லிங்கா’இருக்கத்தான் செய்யிது.
பாடல் வரிகளில் வார்த்தைகளை தெளிவா உச்சரிச்சு பாடியிருக்கே.உன் வாய்சை இன்ஸ்ட்ருமென்ட் இசை ஓவர்லாப் பண்ணாம கச்சிதமா இருக்கு!
தனஞ்செயன்,மியூசிக் டைரக்டர் சாம் ரெண்டு பேருக்கும் என் வாழ்த்துகள்.
—அப்பா.