
பாலசந்திரன், இசைப்பிரியா இருவரின் படுகொலையை மையமாக வைத்து ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்ட ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ (Witness In Heaven) திரைப்படத்திற்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் பாலசந்திரன் மற்றும் ஊடகவியலாளர் இசைப்பிரியா ஆகியோரின் படுகொலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட முழுநீள திரைப்படம்தான் சாட்சிகள் சொர்க்கத்தில்.
இப்படத்தில் “ஈழத்தில் நடந்த கொலை சம்பவங்களோ, சித்திரவதை காட்சிகளோ, இறுதிப்போரில் நடந்த சம்பவங்களோ சித்தரிக்கப்படவில்லை” என்று ஏற்கெனவே கூறியிருந்தார் இப்படத்தின் இயக்குநர் ஈழன் இளங்கோ.
இருப்பினும், இறுதிப்போரில் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளில் முகாம்களில் மற்றும் சமுதாயத்தில் வாழும் மக்களின் சோகக்கதைகள் மற்றும் சம்பவங்கள் இப்படத்தில் காட்சியாக்கப்பட்டுள்ளது.
. அதுமட்டுமின்றி, பாலசந்திரனும் இசைப்ரியாவும் திரையில் தோன்றும் காட்சிகள் உள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து இத்திரைப்படம் மிகவும் உணர்ச்சிவசப்படும் வகையில் கதையமைக்கப்பட்டுள்ளது என்பது இப்படத்தின் சிறப்புக் காட்சி பார்த்த பலரது கருத்தும் ஆகும்.
இதற்கிடையில், இலங்கையில் இப்படத்தை திரையிடும் முயற்சியில் சென்ற மார்ச் 19, 2018 அன்று தணிக்கை பெறுவதற்காக இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருக்கும் தணிக்கை குழுவிடம் விண்ணப்பம் கையளிக்கப்பட்டது, இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், படத்தை இலங்கையில் திரையிட தடை விதித்துள்ளனர். இயக்குநரின் பிரதிநிதிகள் எவ்வளவு முயன்றும், முயற்சி பயனளிக்கவில்லை.
“இறுதிப்போரில் நடந்த சம்பவங்கள் படத்தில் இல்லைதானே பின் எதற்கு தடை?” என்று கேட்டதற்கு, இப்படத்தில் வரும் செய்திகளும், துணைக்கதைகளும், பல இடங்களில் வரும் வசனங்களும், ஒரு பாடலும், மிகவும் உணர்ச்சிகரமாகவும் இலங்கை அரசாங்கத்திற்கும் அரச படையினருக்கும் எதிராகவும் உள்ளது. இத்திரைப்படத்தை இலங்கையில் திரையிட அனுமதித்தால் பல சட்ட ஒழுங்கு சீர்கேடுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன,” என்றும் கூறப்பட்டது.
இதுகுறித்து ஈழன் இளங்கோ கூறுகையில், “நாம் எப்படியாவது இந்தப்படத்தை உலகெங்கும் வாழும் மக்களை பார்க்க வைப்போம், தமிழர்கள் மட்டுமின்றி அனைத்து மொழியினரும் புரிந்துகொள்ளக்கூடியவாறு இத்திரைப்படம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது, ஆகையால், தமிழர்கள் மட்டுமின்றி மாற்றுமொழி பேசும் மக்களைக்கூட இப்படத்தை பார்க்க வைக்க வேண்டும், அப்போதுதான், ஈழத்தமிழருக்கு நடந்த, நடக்கின்ற கொடுமைகளை அறியாதவர் கூட அறிந்துகொள்ள முடியும்,” என்றார்.