புதிய படங்களின் வெளியீட்டு தேதி குறித்த பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வர தயாரிப்பாளர் சங்கம் ரிலீஸ் தேதியை முறைப்படுத்த ஒரு குழுவினை அமைத்தது.
ஆனால், அதை பின்பற்றுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இதனால் நடிகர் ஆர்.கே.சுரேஷ், உதயா உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கம் ஒரு அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளது. அதாவது அடுத்து கிறிஸ்துமஸ், பொங்கல் உள்ளிட்ட விழாக்களுக்கு தயாரிப்பாளர்கள் தங்கள் விருப்பம் போல படங்களை ரிலீஸ் செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.இது குறித்து தயாரிப்பாளர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு,
‘தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் 05.12.2018 அன்று நடைபெற்ற புதிய திரைப்படங்களின் வெளியீட்டு குழு கூட்டத்தில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் பல தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர். அதில், வருகிற டிசம்பர் 14-ம் தேதி அன்று நிறைய திரையரங்குகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் ஒரு சில திரைப்படங்கள் வெளிவரலாம் என்று பேசப்பட்டது. மேலும், ஒரே தேதியில் நிறைய திரைப்படங்கள் வெளிவருவதால் ஏற்படும் பிரச்சனை குறித்தும், பாதிப்புகள் குறித்தும் பேசப்பட்டது. ஆனால் எந்த தயாரிப்பாளரும் அதனை ஏற்று கொள்ளவில்லை.
இந்நிலையில் வருகிற டிசம்பர் 21 மற்றும் ஜனவரி 10ம் தேதிகளில் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் அனைவரும் தங்களது திரைப்படங்கள் விடுமுறை தினத்தன்று (festival date)தான் வெளிவர வேண்டும் என்றும் அவ்வாறு வெளிவந்தால் தங்களுக்கு எந்தவித நஷ்டமும் ஏற்படாது என்று முடிவெடுத்து அவர்கள் விரும்பி கேட்டுக்கொண்டதின் பேரில் தயாரிப்பாளர்கள் சங்கம் மேற்கண்ட கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் ஆகிய இரு தேதிகளில் தயாரிப்பாளர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களது திரைப்படங்களை வெளியீட்டுகொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளது.
மேற்படி, இந்த இரு தேதிகள் தவிர்த்த மற்ற நாட்களுக்கான படங்களின் வெளியீடு குறித்த முடிவுகள் வரும் வாரம் நடைபெறும் அனைத்து தயாரிப்பாளர்கள் கூட்டத்திற்குப் பின் முடிவு செய்யப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.