
ரசிகன் வேற,வாக்காளன் வேற.
நடிகர்களின் ரசிகர்கள் பல்வேறு கட்சிகளில் இருப்பவர்கள்.
அரசியலில் ஆர்வம் உள்ளவர்கள்தான் அந்தந்த நடிகர்களின் கட்சியில் இருக்கமுடியும். ஆனால் அவர்கள் மட்டுமே நடிகர்களின் வெற்றியை ‘தீர்மானிக்கும்’ சக்தியாக இருக்க முடியுமா?.
கூடும் கூட்டத்தை வைத்து ஒரு கட்சியின் வெற்றியை தீர்மானிக்க முடியாது என்பதற்கு பெருந்தலைவர் காமராஜர் சிறந்த உதாரணம்.ஆகவே கூட்டம் என்பது அளவு கோலாக இருக்க முடியாது.
வரப்போகிற தேர்தலில் போட்டியிடுவதற்கு திரை உலகத்தினர் ஆர்வம் காட்டிவருகிறார்கள்.
தங்களின் படங்களுக்கு ரசிகர்கள் காட்டிவருகிற பேராதரவுதான் அவர்களின் அரசியல் பிரவேசத்துக்கு காரணமாக அமைந்திருக்கிறது.
ஆனால் சில நடிகர்கள் விதிவிலக்கு.
கொள்கை அடிப்படையில் மக்களை சந்திக்க விரும்புகிறார்கள்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்,பிரகாஷ்ராஜ் இருவரும் அதற்கு நல்ல உதாரணம்.
திரை உலக செல்வாக்கு,ரசிகர்களின் ஆதரவு, பிஜேபியின் இணக்கமான ஆதரவு , சூப்பர்ஸ்டார் இமேஜ் ஆகியவை ரஜினியை அரசியலுக்கு இழுத்து இருக்கிறது.
வருவேன் என உறுதியாக சொன்னாலும் அரசியல்வாதிகள் அதை நம்புவதாக இல்லை. அவரது உடல்நிலை இடம் தராது என்பதாக சொல்லி வருகிறார்கள்.
பாராளுமன்றத் தேர்தலுக்கு இவர் வராவிட்டாலும் ஆதரவு என்கிற அடையாளத்தை யாருக்காவது காட்டித்தானே ஆகவேண்டும்?
“காட்ட மாட்டேன்.சட்டப்பேரவை தேர்தல்தான் எனது இலக்கு “என்று சொல்வாரேயானால் அவர் மீதான நம்பிக்கை பனிக்கட்டியாக கரைந்து விடக்கூடும் ஆபத்து இருக்கிறது.!
தமிழகத்தைப்போலவே அகில இந்திய அளவிலும் நடிகர்கள் அரசியலில் குதிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள்.
கேரளத்தில் மோகன்லாலின் வலைத்தள பதிவுகள் பெரும்பாலும் பிஜேபி ஆதரவு கருத்துகளாகவே அமைந்திருக்கின்றன .இவருக்கு திருவனந்தபுரம் பாராளுமன்றத் தொகுதியை தருவதற்கு பிஜேபி தயாராகவே இருப்பதாக சொல்கிறார்கள்.
அக்ஷ்ய்குமார்.
இவர் கனடா நாட்டு குடிமகன். இவருக்கு தேர்தலில் போட்டியிட ஆசை. தேசிய விருது பெற்றிருக்கும் இவர் முதலில் தன்னை இந்திய குடிமகனாக மாற்றிக் கொண்ட பின்னர்தான் தேர்தலைப் பற்றி நினைக்க முடியும்.
அனுபம்கெர்,நானா படேகர் ஆகியோருக்கும் எம்.பி. ஆகவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ஆசை இருக்கலாம்.
வாக்கு வங்கியில் சேமிப்பு இருக்கிறதா?












