ஆடி மாதம் வந்து விட்டால் ஐயா பி.ஆர்.ஆதித்தன் அழைப்பு வந்து விடும்.
மாலை முரசுவின் எதிரில் அம்பாள் பில்டிங்கில் ‘தேவி’அலுவலகம்.
“மணி! அய்யா கூப்பிடுறார். இன்னிக்கி வெளியே எங்கேயும் போகலியே,அய்யாவ பாத்திட்டுப் போங்க” என்றார் பொறுப்பாசிரியர் ஜேம்ஸ்.
“ஈவ்னிங் தான் தேவிஸ்ரீ தேவியில் பிரஸ் மீட் ஜேம்ஸ்!. இளையராஜா வர்றார்,காலம்பர எதுவுமில்ல “என்றேன்.
“அப்ப பாத்திட்டு வந்திருங்க!”
கதவில் இருந்த வட்ட கண்ணாடி வழியாக பார்த்தால் அய்யாவை பார்க்க முடியும். உள்ளே யாருமே இல்லை என்பதால் உடனடியாக அழைப்பு.
“என்ன டைரக்டர் பிரகாசம் வந்து பிரச்னை பண்ணினாராமே? இளங்கோ சொன்னார்.” சிரித்துக் கொண்டேதான் பி.ஆர்.அய்யா கேட்டார்.
விளக்கமாக சொன்னேன்.
“எச்சல் இரவுன்னு படம் .சந்திரசேகர் நடிச்சிருக்கார் ஏ.எஸ்.பிரகாசம்தான் டைரக்சன்”
“படம் நல்லா இல்லியோ?”
“ஆமாய்யா. அதான் விமர்சனத்துக்கு அடியில் ஒரு படத்தை வச்சேன்.மொட்டை ஒருத்தன் அவன் கையில முடியை வெச்சிட்டிருக்கிற மாதிரி. சிம்பாலிக்கா படம் நல்லா இல்லேங்கிறத அப்படி சொன்னேன்.”
“ரொம்ப கடுமையா அட்டாக் பண்ணுன மாதிரி தெரியலியா? அதான் வந்திருப்பாரோ?”
“எம்.ஜி.ஆர் .படத்துக்கு ஒரு பக்கத்தை பிளாங்கா விட்டுட்டு வெட்கக்கேடுன்னு குமுதம் விமர்சனம் பண்ணி இருந்துதே..! விமர்சனத்தில வழக்கமான பாணிய அப்பப்ப மாத்தனும்யா! பிரகாசம் வந்த அன்னிக்கி நான் ஆபீஸ்லதான் இருந்தேன். வந்தார் ,பார்த்திட்டு எதுவுமே பேசாம மாலைமுரசுக்குப் போய் இளங்கோவ பாத்திருக்கிறார். அவரிட்ட “தேவி ஆபீஸ்ல பட்டை அடிச்சிட்டு ( விபூதி பூச்சைத்தான் ) ஒரு பார்ப்பான் உட்கார்ந்திருக்கானே அவன்தான் விமர்சனம் எழுதுறவனான்னு கேட்டாராம். அவர் எதோ சொல்லி அனுப்பிச்சிருக்கார்யா.கம்பம் தொகுதி எம்.பி.ராஜாங்கத்துக்கு நான் சொந்தம்னு சொல்லிருக்கார்.’அப்படியா அடிக்காம போறதில்லேன்னு வந்தேன்.நீங்க இப்படி சொல்றிங்கலேன்னு திரும்பிட்டாராம்.” சாதியின் பயன்பாடு.!அடிக்கவும் செய்யும்.அணைக்கவும் செய்யும்..சொந்த சாதிக்காரன் என சொன்ன பொய் கோபத்தை அனைத்திருக்கிறது.
ஆச்சரியம் பி.ஆர்.அய்யாவுக்கு.!
“நீங்க எப்படிங்க அவருக்கு உறவாக முடியும்? நீங்க வேற ஆச்சே!”
பிரகாசத்தை சாந்தப்படுத்துவதற்காக இளங்கோ அப்படியொரு பொய்யை சொல்லி இருக்கலாம் என்பதை அய்யாவிடம் சொன்னேன்.
எனக்கும் பிரகாசத்துக்குமான கோபம் ‘சாதனை ‘படம் எடுக்கும் வரை நீடித்தது.
அந்த படத்தில் என்னை பத்திரிகையாளனாகவே நடிக்க வைத்து என்னுடன் பேசத்தொடங்கியவர் பிரகாசம்.
இதற்கு அன்று அவருக்கு பெரும் உதவியாக இருந்தவர் மதிஒளி செல்வம்.படத்தின் பி.ஆர்.ஓ.
“சரி…ரொட்டீன் ஒர்க் போறப்ப கவனமா இருங்க”என்று என்னை எச்சரித்து விட்டு “இந்த வருஷம் காயாமொழி அம்மன் கொடைக்கு நல்ல கச்சேரியா ஏற்பாடு பண்ணனுமே? ஐடியா எதுவும் இருக்கா?”
எப்பவும் இப்படி கன்சல்ட் பண்ணுவது அவரது வழக்கம்.
“இன்னிக்கு இளையராஜா பிரஸ் மீட் இருக்கு. கங்கை அமரன் வருவார்.அவரிட்ட கேக்கிறேன்யா!”
“பேசிட்டு எனக்கு நைட் பத்து மணிக்குள்ள சொல்லிடுங்க” என்று எனக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டார்.
வழக்கம் போல பிரஸ் மீட் முடிந்ததும் கங்கை அமரனிடம் பேசினேன்.
“அமர்க்களம் பண்ணிடலாம்னே! வாசு,சித்ரா இவங்கள மெயினா வச்சிட்டு கச்சேரிய நடத்திடலாம்.அய்யாகிட்ட சொல்லிடுங்க.”என்று முடிவு சொல்லி ஒரு தொகையையும் சொன்னார்.
அன்றிரவு ஒன்பது மணி அளவில் அய்யாவிடம் சொன்னேன்.அவருக்கு அளவு கடந்த சந்தோசம். ஒவ்வொரு வருசமும் பி.ஆர்.அய்யா நடத்துகிற நிகழ்ச்சிதான் பெரிய அளவில் இருக்கும்.காயாமொழியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சைக்கிள்,பைக்குகளில் இளவட்டங்கள் படை எடுத்து வந்து விடுவார்கள் நிகழ்ச்சி முடிய எப்படியும் நள்ளிரவு ஒரு மணியாகிவிடும் .
அதன் பின்னர் அய்யாவிடம் பேசிவிட்டு திருச்செந்தூர் போவதற்கு இரண்டு மணியாகி விடும். கலைஞர்களுக்கு தங்குவதற்கு அங்குதான் தமிழ்நாடு அரசு சுற்றுலா மாளிகையில் அறைகள் போடுவார்கள்.நான் திருச்செந்தூர் சென்றால் என்னைப் பார்க்க நெல்லைக் கவிநேசன் வந்து விடுவார்.ஆதித்தனார் கல்லூரியில் பேராசிரியர்.நல்ல மனிதர்.
செவ்வாய்க்கிழமை கச்சேரிக்கு கங்கை அமரன் குழுவினருடன் விரைவு ரெயிலில் மதுரையை அடைந்து அங்கிருந்து ஏசி கார்களில் முக்கியமானவர்களும் ,வேன்களில் குழுவினரும் கிளம்பி விட்டோம்.
தூத்துக்குடியை தாண்டி திருச்செந்தூர் சாலையில் பயணம்.
கங்கை அமரனுடன் பயணிப்பது தனிச்சுகம் களைப்புத் தெரியாமல் இருக்க பல விஷயங்களை சொல்லுவார்.வேடிக்கையாக இருக்கும்.விஷயம் உள்ளதாகவும் இருக்கும்.பயணத்தின் களைப்புத் தெரியாது.
வழியில் எங்களுக்கு முன்னாள் சென்று கொண்டிருந்த பஸ் பிரேக் டவுன்.நந்தி மாதிரி வழி மறிப்பு!
கிட்டத்தட்ட ஒரு வழிச்சாலை மாதிரிதான் அன்றைய காலகட்டத்தில் அந்த சாலை அப்படித்தான் இருந்தது. தற்போது அப்படி இல்லை.
அமர் குஷியாகிவிட்டார்.
“வாசு,சித்ரா எறங்குங்க.வயலில் நடந்தது இல்லேல்ல. அப்படியே காலாற வயக்காட்டுக்குள்ள நடப்போம்.நாங்க அந்த காலத்தில் எப்படியெல்லாம் காடு கரையில கூத்தடிச்சிருக்கிறோம் தெரியுமா?” என்றபடியே நடக்க வைத்து விட்டார்.
வேறு யாராக இருந்தாலும் சத்தியமாக அப்படி நடந்து கொண்டிருக்க மாட்டார்கள்.
அழைத்துச்சென்ற எனக்கு அர்ச்சனை பலமாக நடந்திருக்கும்.
பஸ்சை பயணிகள் சேர்ந்து தள்ளி ஓரமாக நிறுத்திய பின்னர்தான் வழி கிடைத்தது. அதுவரை வயக்காட்டுக்குள்ளேயே வெயிலில் வாசு ,சித்ரா அமர் ஆகியோர் அரட்டை !
இன்னும் சுவையான செய்திகளுடன் நாளை மறுநாள் சந்திக்கலாமா?
– தேவிமணி.